கனமழை பாதிப்பு.. கொளத்தூர் தொகுதிக்கு திடீர் விசிட்.. கொசுவலை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் இன்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் காலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் புரசைவாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சிரமங்களை சந்தித்தனர்.

மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக ஓட்டேரி பகுதியில் உள்ள நல்லா பாலம் பகுதியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை அகற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.

கொசுவலை வழங்கும் திட்டம்
இதன்பின்னர் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சி சார்பில் 2.5 லட்சம் கொசுவலைகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதில் முதல் கட்டமாக 20 ஆயிரம் பேருக்கு கொசுவலை வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை அளித்தார். அதேபோல் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற விரைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

படிப்படியாக மழை குறையும்
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டீபன்சன் சாலை, 70 அடி சாலை, பல்லவன் நகர், வீனஸ் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர்பாபு, அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் 16ம் தேதிக்கு பின்னர் கனமழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications