மகளிர் உரிமைத்தொகை வரலையா? சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த செம சர்ப்ரைஸ்.. இனி நிம்மதி
சென்னை: பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று பெண்கள் பலர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து முதலமச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1.63 கோடி விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. முன்னதாக ரூ.1 அனுப்பி உறுதி செய்யப்பட்ட பின்னர், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

இருப்பினும் பல பெண்கள் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என் விமர்சித்திருந்தனர். சில இடங்களில் இது தொடர்பாக போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இப்படி இருக்கையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக தரப்பில் சட்டமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால்தான் உரிமைத்தொகை தாமதமாக வழங்கப்பட்டது. இருப்பினும் மேல் முறையீடு செய்பவர்களில் தகுதியானவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்
முதல்வரின் இந்த வாக்குறுதியால் ஏற்கெனவே விண்ணப்பித்து உரிமைத்தொகை பெறாதவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது வரை சுமார் 9 லட்சம் பெண்கள் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications