ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்... மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை?
தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். மழை வெள்ள பாதிப்புகள், தமிழக நிலவரம் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆளுநரை சந்திக்கிறார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள், சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், விவசாய நிலங்கள் பாதிப்பு தமிழகம் எடுத்துவரும் நடவடிக்கை, மத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை உள்ளிட்டவை இந்தப் பேச்சுவார்த்தையில் இருக்கும் எனத்தெரிகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி
கடந்த 2021 ஏப்ரலில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. ஸ்டாலின் முதல்வர் ஆனார். ஆட்சிப்பொறுப்பேற்றபோது ஆளுநராக பன்வாரிலால் ப்ரோஹித் இருந்தார். ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமாக இருந்த நிலையில் அதற்கான முழுவீச்சில் இறங்கியது. தடுப்பூசி இயக்கத்தையும் அதிகரித்து கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

மத்திய அரசுடன் இணக்கம் வராத நிலை
ஆட்சி ரீதியாக தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமான போக்கில் இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவை எதிர்க்கும் கட்சியாக திமுக உள்ளது. மத்திய அரசின் பல திட்டங்களை திரும்பபெற கோரி திமுக சட்டப்பேரவையிலும், எதிர்க்கட்சிகளுடன் இணைந்தும் கோரிக்கை வைத்து வருகிறது. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய தென்மண்டல கவுன்சில் கூட்டத்துக்கு செல்லாமல் முதல்வர் தவிர்த்தார். உயர் கல்வித்துறை அமைச்சரை பங்கேற்க செய்தார்.

ஆளுநர் மாற்றம்
தமிழகத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். மத்திய உளவுப்பிரிவில் பணியாற்றியவர். அரசியல் ரீதியான விஷயங்களில் அனுபவம் மிக்கவர். ஆளுநராக ரவி பொறுப்பேற்றவுடன் முதல்வர் அவரைச் சந்தித்து பேசினார். சமீபத்தில் ஓபிஎஸ் ஆளுநரை திடீரென சந்தித்து பேசினார். ஓபிஎஸ் தனிமையில் ஆளுநரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வடகிழக்கு பருவமழை கடும் பாதிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதி கனமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரில் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் மத்தியக்குழுவினர் வந்து ஆய்வு நடத்தினர்.
தமிழக அரசு மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் முந்தைய அரசின் குளறுபடி காரணமாக சென்னை போன்ற முக்கிய பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது என திமுகவும், திமுக மழை நீரை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, நிவாரண தொகை வழங்கவில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
இந்நிலையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ராஜ்பவனில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள், குறிப்பாக சென்னை பாதிப்பு, டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு உள்ளிட்டவை குறித்த தமிழக அரசின் நடவடிக்கை, ஸ்மார்ட் சிட்டி பிரச்சினையால் வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி முதல்வர் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications