'அதிகப்பிரசங்கித்தனம்.. நடவடிக்கை எடுங்க' தவாக வேல்முருகனால் சட்டசபையில் டென்ஷனான மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவை மாண்பை மீறி வேல்முருகன் நடந்து கொள்ளக் கூடாது என்று கூறிய மு.க.ஸ்டாலின், இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாள் விவாதம் நடந்து வந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.

அப்போது பாமக எம்எல்ஏ ஜிகே மணி, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு அமைச்சர் மெய்யநாதன் தரப்பில், அதனை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது. அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மாநில அரசு நடத்தக் கூடாது என்று எந்த உச்சநீதிமன்றமும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இடஒதுக்கீடு தொடர்பான சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அதேபோல் இருந்த இடத்தைவிட்டு எழுந்து அமைச்சர்களை நோக்கி கைகளை நீட்டி பேசி இருக்கிறார். அதேபோல் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று பேசுவதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டதோடு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அப்போது சபாநாயகர் அமைதியாக இருக்குமாறு கூறிய போதும், கோஷம் எழுப்பி கொண்டே இருந்தார்.
இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் டென்ஷனாகினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார். இது வேதனை அளிப்பதாக இருக்கிறது. அவை மாண்பை மீறி வேல்முருகன் நடந்து கொள்ளக் கூடாது. இருக்கையை விட்டு வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல.
இதனால் வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், இனி இப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபை வரலாற்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த எல்எல்ஏ-வுக்கு எதிராக இதுபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததில்லை. அதேபோல் அதிகபிரசங்கித்தனம் போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தியதில்லை. அதேபோல் தவாக வேல்முருகன் பண்ருட்டி எம்எல்ஏ-வாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications