ஆங்கிலேயர் காலத்து பழைய எழும்பூர் கமிஷனர் அலுவலகம்..மியூசியமாக மாற்றம்..திறந்து வைத்தார் முதல்வர்
சென்னை: பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருங்காட்சியகமாய் மாற்றப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இங்கு பிஸ்டல், ரிவால்வர் முதல் நவீன துப்பாக்கி வரை பல்வேறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூரில் இயங்கிய காவல் துறை ஆணையர் அலுவலக கட்டடம் 178 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் காலத்தில் 1842 ஆம் ஆண்டு வேப்பேரியில் இயங்கி வந்தது. இதையடுத்து எழும்பூர் பாந்தியன் சாலையில் 36 ஆயிரம் சதுர அடி கொண்ட ஒரு கட்டடத்தில் மாதம் ரூ 165 வாடகைக்கு ஆணையர் அலுவலகம் இடமாற்றப்பட்டது.
அந்த கட்டடத்தை நகர காவல் துறையே 21 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதும் காவல் ஆணையர் முறையை நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்தனை பாரம்பரியம் கொண்ட இந்த கமிஷனர் அலுவலகம் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வேப்பேரி ஈவேகி சம்பத் சாலையில் உள்ள 8 மாடி கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

பழைய கமிஷனர் அலுவலகம்
தற்போது பாந்தியன் சாலையில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் முன் பகுதியில் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிபிசிஐடி, ரயில்வே அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. எனினும் கமிஷனர் இருந்த அறை, அதற்கு மேல் உள்ள மாடிகள் அப்படியே இருக்கின்றன. இதனால் இந்த கமிஷனர் அலுவலக கட்டடத்தை காவல் துறை அருங்காட்சியமாக மாற்ற நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வந்தன.

ஆங்கிலேயர் காலம
இந்த அருங்காட்சியகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட அறிவிப்புகள், காவல் துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், ஆங்கிலேயர் காலத்தில் இருந்த போலீஸ் சீருடைகள், மோப்ப நாய் படைகளின் புகைப்படங்கள், வயர்லெஸ் கருவிகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க தொகுப்புகள், ரிவால்வர் முதல் நவீன துப்பாக்கி வரை, காவல் துறை பதக்கங்கள் உள்ளிட்டவை இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது.

அருங்காட்சியகம்
பழைய கமிஷனர் அலுவலகத்தை இடித்துக்கட்ட முடிவு செய்திருந்த நிலையில் காவல்துறையின் அடையாளமாக அதை அருங்காட்சியகமாக பழமை மாறாமல் இளைய தலைமுறை அறிந்துக்கொள்ளும் வகையில் மாற்ற காவல் உயர் அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி பழைய கமிஷனர் அலுவலகத்தை அருங்காட்சியகமாய் மாற்றியுள்ளனர். அதை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் எஸ்.கே. பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் காவல்துறைக்கென அமைக்கப்படும் 2 வது அருங்காட்சியகம் இதுவாகும். கோவையில் ஒன்று ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

காவல் துறை அருங்காட்சியகம்
சென்னை காவல் துறை அருங்காட்சியகத்தில் தமிழக காவல் துறையை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதன் மூலம் காவல்துறையில் சேர்ந்து நாமும் பணியாற்றி சேவை செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை இது ஏற்படுத்தும் என்கிறார்கள். அருங்காட்சியகத்தில் உள்ள விஷயங்கள் ஆடியோ மற்றும் வீடியோ மூலம் பார்வையாளர்களுக்கு எடுத்து சொல்லும் படி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள்
இந்த அருங்காட்சியகத்தை பள்ளி மாணவர்கள், குழந்தைகள் கண்டுகளிக்கும் போது நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக் கொள்ள இந்த மியூசியம் உதவும். தற்போது மருத்துவர், பொறியாளர், ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங், பயோ டெக்னாலஜி என மாணவர்கள் தங்களை குறுகிய வட்டத்திற்கு சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கு சேவை செய்யவும் நேர்மையை நிரூபிக்கவும் மிகவும் அருமையான பணி காவல் பணியாகும்.












Click it and Unblock the Notifications