4 நாள் அரசு முறை பயணம் நிறைவு! ஐக்கிய அமீரகத்தில் இருந்து நாடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தனது 4 நாட்கள் ஐக்கிய அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
சர்வதேச முதலீடுகள் ஈர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். இந்த 4 நாட்கள் பயணத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்தப் பயணத்தின் தொடக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள முக்கிய அமைச்சர்கள் முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக உள்ள சூழல் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விவரித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் அபுதாபிக்குச் சென்றார்.
அங்கும் தமிழ்நாட்டிற்குப் பல சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அபுதாபியிலும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து அபுதாபி தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்தச் சூழலில், முதல்வர் ஸ்டாலின் தனது 4 நாட்கள் ஐக்கிய அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார். அதிகாலை 2 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, துபாய் பயணம் குறித்தும், முதலீடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications