"தேசிய அரசியலுக்கு வாருங்கள்" முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பரூக் அப்துல்லா!
மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக மு.க.ஸ்டாலின் விளங்குவதாக கூறிய அவர், எதிர்க்கட்சிகளின் பிரதமர் யார் என்பதை தேர்தல் வெற்றிக்கு பின் முடிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கோர் திரண்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் அவர் எந்த மதத்திற்கும் எதிரானவர் இல்லை.

அகிலேஷ் யாத பேச்சு
முதலமைச்சராக பதவியேற்ற ஒரு ஆண்டிலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற சிறப்பான திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்கிறார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து துணை நின்றவர் மு.க.ஸ்டாலின் என்று தெரிவித்தார்.

பரூக் அப்துல்லா பேச்சு
இதன் பின்னர் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசுகையில், ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குகிறார் மு.க.ஸ்டாலின். எனது தந்தைக்கும், அவரது தந்தைக்கும் நல்ல நட்பு இருந்தது. எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களும் இந்திய குடிமக்கள் தான்.

பிரதமர் வேட்பாளர்
எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது முக்கியமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு வெற்றிதான் முக்கியம். தேர்தல் வெற்றிக்கு பின் பிரதமர் யார் என்பதை தேர்தல் வெற்றிக்கு பின் முடிவு செய்யலாம். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை, வலியுறுத்திகிறேன்: பரூக் அப்துல்லா

எதிர்க்கட்சிகள்
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இளைஞர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனை முறியடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும். மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications