சொன்னதை செய்யும் ஸ்டாலின்.. முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி கிளம்புகிறார்! இதோ இதுதான் முதல்வரின் பிளான்
சென்னை: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே, தமிழகத்தை 2030ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவேன் என்று உறுதி தந்திருந்தார்.. அதன்படியே பல்வேறு நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சுற்றுப் பயணங்களையும் முதல்வர் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இருந்தார். தற்போது ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சரின் பயணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
4 நாட்களுக்கு முன்பு, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "பல்வேறு புதிய திட்டங்கள் தமிழ்நாட்டை நோக்கி ஒவ்வொரு நாளும் வந்த வண்ணம் உள்ளன. புதிய புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி வருகின்றன.

முதலீடுகள் - புரிந்துணர்வு ஒப்பந்தம்
திமுக அரசை பொறுத்தவரை முதலீடுகளை வரும்போது, எவ்வளவு தொகை வருகிறது என்று பார்ப்பதை விட அதன்மூலம் எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்றுதான் பார்க்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதுமே, அரசின் துறை செயலாளர்கள் குழுவானது, உடனுக்குடன் அனுமதியும் தந்துவிடுகிறது.. இதனால் ஏராளமான ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன
.
2021ம் ஆண்டு முதல் இதுவரை செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவிகிதம் வரைக்கும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 2024 தொழில் முதலீடு மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
அதில் ஏறத்தாழ சுமார் 525 ஒப்பந்தங்கள் அதாவது 80 சதவிகிதம் வரை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. குறிப்பாக வாகனத் துறையில் 100 சதவிகித ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நாங்கள் கையெழுத்து போடுவதோடு நிறுத்தாமல் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்துள்ளோம்.
திமுக ஆட்சியில் சபாஷ்
திமுக ஆட்சியில் சென்னை, காஞ்சிபுரம் என வட மாவட்டங்களுக்கு இணையாக தென் மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றன. தமிழ்நாடு ரைசிங் என்ற பெயரில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் நடத்தியுள்ளோம், அதில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அடுத்து ஓசூர், கோவை, மதுரை என பல இடங்களில் நடத்த உள்ளோம். ஐரோப்பாவிலும் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. அதே சமயம் தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுகிறது.
ஜெர்மன் செல்கிறார் முதல்வர்
தமிழக முதல்வர் பல நாடுகளுக்கும் சென்று அங்கிருந்து முதலீடுகளை ஈர்த்துள்ளார். முதல்வர் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 30-ந்தேதி ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. அத்துடன் முதலமைச்சரின் பயண விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.
இதுதான் பயண விவரம்
அதன்படி 30-ந் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார். 31-ந் தேதி அங்கு ஜெர்மனி அயலக அணி நிர்வாகிகளை சந்திக்கிறார். செப்டம்பர் 1-ந் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். 2 அல்லது 3-ந் தேதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தொழில் முனைவோரை சந்தித்து உரையாடுகிறார்.
4-ந் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியத்துடனான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 6-ந் தேதியில் லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 7-ந் தேதி மாலை அங்கிருந்து புறப்படுகிறார். செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகிறார்.












Click it and Unblock the Notifications