பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. 6000 பேருக்கு வேலை உறுதி
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் ரூ.330 கோடி செலவில் டைடல் பூங்கா கட்டப்பட்டு உள்ளது.இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். 6000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்காவின் மூலம் திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டப்பட்டு உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

இக்கட்டிடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், 24 மணிநேர பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
6 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டிடம் வழிமுறைகளின்படியும் இக்கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அந்த மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
பட்டாபிராம் டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் அளிக்கப்பட்டுள்ள தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். அதைத்தொடர்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இப்பெருங்குழும திட்டத்தின் முதல் பகுதியாக ரூ.18.18 கோடி மதிப்பீட்டில் ரூ.13.33 கோடி மானியத்துடன் வடிவமைப்பு மையம், மறு பொறியியல் பரிசோதனைக் கூடம், சேர்க்கை உற்பத்தி மையம், மேம்பட்ட பயிற்சி மையம், காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் போன்றவை நிறுவப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 14-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டை சங்கத்தினரால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு ஊர்தி மூலம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பொது வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்தி பயன்பெறலாம்" இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனிடைய அரசு அறிவிப்பின் படியே, திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 6000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட டைடல் பூங்கா மூலம் திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் அரசு அறிவிப்பில் கூறப்பட்டபடி, காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications