முதலமைச்சர் ஸ்டாலினை வேதனைப்படுத்திய தொப்பூர் விபத்து! யோசிக்காமல் உடனே நிதியுதவி!
சென்னை: தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிகழ்வு தன்னை வேதனை அடையச் செய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகம் விபத்து நடைபெறும் இடங்களில் ஒன்றாக தொப்பூர் கணவாய் திகழ்கிறது. இதற்கு காரணம் பேய், பிசாசு என்று சிலர் கூறினாலும், சாலையின் அமைப்பு முறையே விபத்துக்கு காரணமாக அறிவியல் ரீதியாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தொப்பூர் இரட்டை பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

''தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2025 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமதி.மஞ்சு (வயது56) க/பெ. கார்வின், திரு.விமல் (வயது 28) த/பெ.ஜெயபால், திருமதி. அனுஷ்கா (வயது.23) க/பெ. விமல், திருமதி. ஜெனிபர் (வயது 29) க/பெ. வினோத் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். ''
''இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். '' இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications