அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாவடக்கத்துடன் பேச வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் காட்டம்
சென்னை: தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இதில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுகிறது என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார். மேலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழக அரசு தவறாக பரப்புரை மேற்கொண்டு வருகிறது. தமிழக மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
இதனால், நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து திமுகவினர் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, அவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அநாகரீகமானவர்கள் என்ற வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!. தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?.
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா?. NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?.
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications