வாழும் வழிகாட்டி! முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் ஆளுமையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் என்.சங்கரய்யா இன்று தனது 102 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டின் சமகால அரசியல் தலைவர்கள் பலருக்கும் வழிகாட்டியாகவும், லட்சியத் தலைவராகவும் திகழ்பவர் சங்கரய்யா.

சுதந்திரப் போராட்ட வீரராக, கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளராக, பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பரிமாணங்களை கொண்டவர் சங்கரய்யா. 8 ஆண்டுகால சிறை, 3 ஆண்டுகால தலைமறைவு வாழ்க்கை என நாட்டு மக்களின் நலனுக்காக தியாகத் தழும்புகளை ஏந்தியவர் சங்கரய்யா.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, தகைசால் தமிழர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தகைசால் தமிழர் விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமையாக என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார். அந்த விருதோடு வழங்கப்பட்ட ரூ. 10 லட்சத்தை முதலமைச்சரின் கோவிட் - 19 பேரிடர் நிவாரண நிதிக்கே வழங்கினார் சங்கரய்யா.
சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் 'தகைசால் தமிழர்' சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவுடைமை இலட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு!" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications