பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்! நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு! பெருமை சேர்த்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பேராசிரியர் அன்பழகனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பள்ளிக்கல்வித் துறை வளாகத்துக்கு 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என பெயர் சூட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில், டி.பி.ஐ. வளாகத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்" எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கல்வி வளர்ச்சிக்கு
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்'' என்றும் அழைக்கப்படும் என்று 30.11.2022 அன்று முதலமைச்சர் அறிவித்தார்.

நூற்றாண்டு நினைவு வளைவு
அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டிய முதல்வர், அதற்கான பெயர் பலகையினை திறந்து வைத்தார். மேலும், பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளிக்கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்தின் நுழைவு வாயில் எண் 2-ல் கட்டப்பட்டுள்ள பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

85 லட்சம் ரூபாய்
பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவு மற்றும் பெயர் பலகை ஆகியவை 85 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications