நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். முன்னதாக, காவலர்கள், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டு சுதந்திர தின பேருரையாற்றினார். அப்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியே 6.5 சதவீதம்தான் என்றும், ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறினார்.
நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர், திறந்த ஜீப்பில் வந்து முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சுதந்திர தினக் கொடியேற்றி உரையாற்றிய முதல்வர் 9 திட்டங்களை அறிவித்துள்ளார். அவர் பேசுகையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் என் விடுதலை நாள் வாழ்த்துகள். விடுதலை வீரர்கள், அவரது குடும்பத்தினரை வணங்குகிறேன். விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் விடுதலை வீரர்களை போற்றுவோம்.
தேசிய கொடியை நான் மட்டுமல்ல, அனைத்து மாநில முதல்வர்களும் இந்தநாளில் ஏற்று தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை 1974 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இந்த முறை இந்த தேசியக் கொடியை ஏற்றி வைக்க வாய்ப்பு தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என தலைவர்கள் கனவு கண்டனர். தியாகிகளைத் தொடர்ந்து போற்றி வரும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு உள்ளது.
கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு நமது திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிகரித்து மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது சொல்லியிருந்த 9.6 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு அதிகம். இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக திகழ்கிறது தமிழ்நாடு. இது வேறெந்த மாநிலமும் பெறாத வளர்ச்சி.
நாட்டின் வளர்ச்சியே 6.5 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாட்டின் வளச்சி 11.19 சவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்களுக்கு இது மாபெரும் வெற்றி ஆகும். நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு 788 புள்ளிகளுடன் இந்தியாவில் 2 வது இடத்தில் உள்ளது.
சமூக முன்னேற்ற குறியீடுகளில் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 1.43 சதவீதம் மக்களே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்களது வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் பணியில் நமது அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் அதன் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளோம்.
ஜவுளி மற்றும் தோல் பொருள்களின் ஏற்றுமதியில் முதன்மையான மாநிலமாக உள்ளோம். ஒற்றை துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக இருக்கும். அனைத்து மாவட்டங்களும் அனைத்து சமூக மக்களும் வளர்வதை நீங்கள் காணலாம் என்று கூறினார்.
தியாகிகளுக்கு ரூ. 20 ஆயிரம் ஓய்வூதியமாகவும், அவரது குடும்பத்தினருக்கு ரூ 10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கி வருகிறோம். தற்போது தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ 22 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட 9 திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications