பரபர சூழலில் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம்! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது! ஏன் முக்கியம்?
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பிக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்க இருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மழைக்கால கூட்டத் தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர்: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால், அதை கடுமையாக எதிர்க்க பல்வேறு தலைவர்கள் தயாராக இருப்பதாக தெரிகிறது.
டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்களை சந்தித்து அர்விந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்த நிலையில், அதுவும் மழைக்கால கூட்டத்தொடரில் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக அரசின் விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையீடு குறித்தும், திமுக அமைச்சர் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள், நீட் விலக்கு, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பும் என்று கூறப்படுகிறது.
திமுக எம்பிக்கள் கூட்டம்: இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் அனைத்து மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து எம்.பிக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இந்தக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், திமுகவை குறிவைத்து வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்படுவது, நீட் விலக்கு, பொது சிவில் சட்டம், விலைவாசி உயர்வு, மணிப்பூர் கலவரம் ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதங்களை எழுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications