பெரியார் ஒரு உலகத் தலைவர்! இதை நான் சொல்லவில்லை.. உலகமே ஏற்றுக்கொண்ட ஒன்று -ஸ்டாலின்
சென்னை: பெரியார் ஒரு உலகத் தலைவர் என்றும் இதனை உலகமே ஏற்றுக்கொண்டு விட்டது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கே சமூகநீதிக்கான தலைமையகமாக பெரியார் திடல் திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெரியார் திடலில் நடைபெற்ற 'பெரியார் உலகம்' அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.

பெரியார் திடல்
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியாவிற்கே சமூகநீதிக்கான தலைமையகமாக பெரியார் திடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் தொடங்கி, அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் இந்தப் பெரியார் திடலுக்கு வராத தலைவர்களே நிச்சயமாக இருக்க முடியாது.

பெரியார் உலகம்
தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கியது பெரியார் திடல். அய்யா ஆசிரியர் அவர்கள் உருவாக்கியிருப்பது பெரியார் உலகம். அத்தகைய உலகச் சிறப்புமிக்க பெரியார் உலகத்தின் அடிக்கல் நாட்டக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார் கொள்கை வாழக்கூடிய காலமெல்லாம் என் பெயரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இப்போதே நான் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறேன், பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், புலங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறேன்.

உலகம் முழுவதும்
பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடவும் இருக்கிறோம் என்பதை நான் அன்றைக்கு அறிவித்திருக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாருடைய சிந்தனைகளைத் தேடித் தேடி அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத் தலைவர் பெரியார்
ஏனென்றால் தந்தை பெரியார் அவர்கள், உலகத்தலைவர் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல - உலகம் முழுமைக்குமான தலைவராக நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications