கிராம மக்கள் இனி அலைய வேண்டியதில்லை! வருகிறது கிராமச் செயலகங்கள்! ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!
சென்னை: கிராமப்புறங்களில் அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்திட "கிராமச் செயலகங்கள்" கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, சமூக நலத்துறை போன்ற முக்கிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படக்கூடிய அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்திட இந்தச் செயலகங்கள் உதவும் எனக் கூறியுள்ளார்.
இந்தாண்டே 600 ஊராட்சிகளில் இந்த செயலகங்கள் கட்டப்படும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.
கிராமச் செயலகங்கள் கட்டப்படுவதன் மூலம் இனி கிராமமக்கள் எதற்காகவும் அலைய வேண்டிய சூழல் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பின் விவரம் வருமாறு;

உத்தமர் காந்தி கிராம ஊராட்சி
கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக் கொணரக்கூடிய வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய கிராம ஊராட்சித் தலைவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில், நான் துணை முதலமைச்சராகவும், துறையினுடைய அமைச்சராகவும் இருந்தபோதுதான், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால், ‘உத்தமர் காந்தி கிராம ஊராட்சி' என்ற விருது 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது.

10 முக்கிய காரணிகள்
10 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்புடைய ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம் மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை, 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு முதல் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

உத்தமர் காந்தி விருது
சிறப்பாகச் செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு "உத்தமர் காந்தி விருது" 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்பதையும், ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு பத்து இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கிராமச் செயலகங்கள்
உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற நோக்கத்துடன், மக்களாட்சியின் மாண்பினை கிராம அளவில் உறுதி செய்திட ஏதுவாக, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மற்றும் சமூக நலத் துறை போன்ற முக்கிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படக்கூடிய அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்திட 600 ஊராட்சிகளில் "கிராமச் செயலகங்கள்"இந்த ஆண்டே கட்டப்படும் என்பதை இந்த அவையில் பெருமகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.
Recommended Video

40 லட்சம் ரூபாய்
இந்த கிராமச் செயலகங்கள் ஊராட்சித் தலைவருக்கான அறை, அனைத்துத் துறை கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலருக்கான அறை, கிராம ஊராட்சிச் செயலருக்கான அறை, இணைய வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கும். இந்த புதிய முன்னெடுப்பின் முதற்கட்டமாக, இந்த ஆண்டு 600 புதிய கிராமச் செயலகக் கட்டடங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications