நன்னனை மரணம் நெருங்கும் போது என்ன சொன்னார் தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த ஃபிளாஷ்பேக்!
சென்னை: பேராசிரியர் நன்னனை மரணம் நெருங்கும் போது மரணிக்கப் போகிறோம் என்ற வருத்தம் தனக்கு கிடையாது என்றும் தாம் நிறைவாழ்க்கை வாழ்ந்து விட்டதாகவும் கூறினார் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய போது அவர் இதனைக் கூறினார். மேலும், அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரை வருமாறு;
''பிழையின்றி எப்படி எழுத வேண்டும், பிழையின்றி எப்படி பேச வேண்டும் என்பதை கற்பிக்கும் மிகப் பெரிய ஆசானாக பேராசிரியர் நன்னன் விளங்கினார். சென்னை தொலைக்காட்சியில் அவரது தமிழ் வகுப்புகள் 17 ஆண்டுகள் வந்துள்ளது. எந்த ஒரு தமிழாசிரியரும், தமிழ்ப் பேராசிரியரும் அடைய முடியாத பெருமை இது.

தனக்கு முன்னால் மாணவர்கள் உட்கார்ந்து கேட்பதாக நினைத்துக் கொண்டு அவர் எடுத்த வகுப்பு உண்மையில் ஆச்சரியமானது, அசத்தலானது. நன்னன் விரலுக்கு, விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தவன் நான். அவரை பொறுத்தவரைக்கும், என்னோடு வாரத்திற்கு இரண்டு முறையாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வதுண்டு.
அப்படி தொடர்பு கொள்கிறபோதெல்லாம் உங்கள் அறிக்கையை பார்த்தேன். உங்கள் பேச்சை படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. அதைதாண்டி, எனக்கு அறிவுரையும் பல நேரங்களில் அவர் சொல்லியிருக்கிறார்.திடீரென்று ஒரு வாரம் அவரிடத்திலிருந்து எனக்கு ஃபோன் வரவில்லை. நானே நினைத்துக் கொண்டேன். உடல் நிலை சரியில்லை போலிருக்கிறது என்று கருதி உடனே அவரை நேரடியாக சென்று பார்த்து விசாரித்தேன்.
ஆமாம் என்று சொன்னார். அதனால்தான் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்தத்தோடு சொன்னார். அப்போதும் எனக்கு உற்சாகத்தை வழங்கினார். திடீரென்று ஒருநாள் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் அறிவாலயத்திற்கு வந்தார். அனைவரையும் பார்த்துவிட்டு போகவேண்டும், உற்சாகப்படுத்தி விட்டுப் போகவேண்டும் என்பதற்காகதான் வந்தேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.
நவம்பர் மாதம் 7ம் நாள் நன்னன் மறைந்தார். மறைந்தார் என்று சொல்ல முடியாது. அவர் மறைந்த பிறகும், புத்தகங்கள் அவர் பெயரால் வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், எழுத்தால், சிந்தனையால், செயலால் நன்னன் அவர்கள் வாழ்கிறார். தொடர்ந்து அவர் வாழ்வார்.
மரணம் நெருங்கும் போது அவர் சொன்னார், எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. நான் நிறைவாழ்க்கை வாழ்ந்து விட்டேன் என்று சொன்னார். தனக்குப் பின்னால் தனது குடும்பம், தனது செயலைத் தொடர்ந்து செய்ய வழிகாட்டினார்.''












Click it and Unblock the Notifications