டாக்டர்கள் பேச்சை மீறிய முதலமைச்சர் ஸ்டாலின்! எவ்வளவோ சொல்லியும் கட்சிக்காரர்களுக்காக எடுத்த ரிஸ்க்!
சென்னை: கடும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்படும் நிலையிலும், மருத்துவர்களின் பேச்சை மீறி கட்சிக்காரர்களுக்காக ரிஸ்க் எடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை மண்டல திமுக பாக முகவர்கள் கூட்டம் இன்று திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டாலினின் பேச்சை கேட்கவும் அவரை பார்க்கவும் சென்னை மண்டல திமுகவினர் பெருமளவில் திரண்டிருந்தனர். அவர்களுக்கு வழக்கம் போல் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என அறுசுவை அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதால் அவரது பிரதிநிதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மண்டல திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில்கட்சிக்காரர்கள் சோர்வடைந்து விடக் கூடாது என்பதால் யாரும் எதிர்பாராத வகையில் காணொலி மூலம் தோன்றி தன் உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் உரை நிகழ்த்தினார் ஸ்டாலின்.
அப்போது பேசிய அவர், ''நீங்கள் யாரும் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அதிகம் பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி வந்து இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன். இப்போது என்னுடைய பேச்சைச் சுருக்கமாக தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' எனக் கூறிவிட்டு கூட்டம் முடியும் வரை அதனை காணொலி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
தாம் திமுக பாக முகவர்கள் கூட்டத்துக்கு வரவில்லை என்று சொன்னாலும் தன்னுடைய நினைவுகள் எல்லாம் அங்கு என்ன இருக்கிறது எனவும் கூட்டம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று தான் என்னுடைய சிந்தனை எல்லாம் இருந்தது எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல், இருமலால் அவதிப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், பிரபல காது மூக்கு தொண்ட அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரனிடம் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்விலிருந்து வருகிறார். ஓரிரு நாட்களில் வழக்கம் போல் தலைமைச் செயலகம் புறப்பட்டு விடுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications