உணர்ச்சிகரமாகக் கடிதம் எழுதிய மாணவன் .. உடனே பதில் போட்ட முதல்வர் ஸ்டாலின்... ஏன் தெரியுமா?
சென்னை: மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் மாணவன் ஹரிஷ் குமரன். முதலமைச்சர் ஸ்டாலின் இவரது கனவு நிறைவேற வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஓர் ஏழை மாணவனின் எழுத்து முதல்வர் வரை போய்ச் சேர்ந்திருக்கிறது. அப்படி என்னதான் எழுதினார் ஹரிஷ்? அவரது கனவுதான் என்ன?

அனைத்தையும் விளக்கமாக அவரிடமே கேட்டோம். அவர் கடிதத்திற்குப் பின்னால் இருந்த A to Z விஷயங்கள் அனைத்தையும் மளமளவென்று நம்மிடம் ஒப்பித்தார் மாணவர் ஹரிஷ்.
"என் அப்பா பெயர், தங்கப் பாண்டியன், அம்மா பெயர், சண்முக பிரியா. நான் சென்னை பிஏகே பழனிசாமி மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். இந்த வருடம் வெளியான 11 ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 573 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். அதில் இரண்டு பாடங்களில் 100க்கு 100 பெற்றுள்ளேன். ஒரு பாடப் பிரிவில் 99 மதிப்பெண் எடுத்திருக்கிறேன்.

வருங்காலத்தில், நன்றாகப் படித்து ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு. ஆகவே அதை இலக்காக வைத்துப் படித்து வருகிறேன். என் வீட்டில் பெரிய அளவில் பணவசதி இல்லை. சாதாரணமான பொருளாதார பின்புலத்தைக் கொண்டவன் நான்.
எனவே, அரசு என்னைப் போன்ற மாணவர்கள், பணக் கவலை இல்லாமல் படிக்க ஏதாவது திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறதா என இணையத்தில் தேடிப் பார்த்தேன். அப்படித் தேடிப் பார்க்கும்போதுதான் 'நான் முதல்வன்' திட்டம் பற்றி அறிந்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிள் கொண்டுவந்துள்ள புதுமையான திட்டம் இது.
உயர் படிப்புகளுக்குப் போகும்போது பல சந்தேகங்கள் இருக்கும். அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்ட உதவுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இதில் பலதுறை சார்ந்த வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நமது விருப்பம் என்ன? நாம் அதற்கு எந்த வழிகளில் எல்லாம் உழைக்க வேண்டும்? எந்தப் பாடங்களைத் தேர்வுசெய்ய வேண்டும்?... போன்ற பல சந்தேகங்களுக்கு முறையாக வழிகாட்டுகிறார்கள்.

என்னைப் போன்ற மாணவர்கள் குழப்பமே இல்லாமல், ஒரு தெளிவைப் பெற இந்தத் திட்டம் மிகச் சிறப்பாக உதவி செய்கிறது. இதைப் போன்ற ஒரு திட்டத்தை உருவாக்கித் தந்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறி கடிதம் கடிதம் எழுதி இருந்தேன்.
அந்தக் கடிதத்தில், 11 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களைப் போலவே, 12 ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும், நல்ல கல்லூரியில் நான் விரும்பும் பாடப் பிரிவில் இடம் கிடைத்துச் சேரவேண்டும், பின்னர் நல்ல வேலையில் சேர்ந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

வரப்போகும் 6 வருடங்களுக்குள் நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகக் கட்டாயம் வரவேண்டும். ஆகவே, என் அத்தனை முயற்சிகளுக்கும் உங்களின் வாழ்த்துகள் தேவை என்று கூறி இருந்தேன்" என்கிறார் மாணவர் த.ஹரிஷ் குமரன்.

இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "சென்னை பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளியில் பயின்று 11-ஆம் வகுப்பில் 573/600 மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர் த.ஹரிஷ் குமரன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சரின் 'நான் முதல்வன்' திட்டம் தன்னை ஊக்கப்படுத்தியதாகவும், 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெற முதலமைச்சர் வாழ்த்த வேண்டும்'' என்று தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்.
ஹரிஷ் குமரன் விரும்பியபடியே 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று, 'நான் முதல்வன்' திட்டத்தை நன்கு பயன்படுத்தி உயர்கல்வியில் சேர்ந்து, இந்திய ஆட்சிப் பணியாளராகிட வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகனின் கடிதம் குறித்து தந்தை தங்கப்பாண்டியன், "எனக்கு 2 மகன்கள். அதில் பெரிய பையன்தான் த.ஹரிஷ் குமரன். அவன் 11 ஆம் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான்.
அவனுக்கு ஒரு ஆசை, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது குறித்து கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என. முதல்வருக்குக் கடிதம் எழுதினான். அதில் அரசு கொண்டுவந்துள்ள 'நான் முதல்வன்' திட்டத்தைப் பற்றி அறிந்து அதையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறான்.
அந்தத் திட்டத்திற்கு வைத்துள்ள 'நான் முதல்வன்' என்ற வார்த்தையே அவனுக்கு உத்வேகம் தரும்படி இருந்துள்ளது. நாமும் அதைப்போல் முதல் மாணவனாக வரவேண்டும் என்ற விதையை அவன் மனதில் விதைத்திருக்கிறது. அதை என்னிடம் அவன் சொன்னான். சரி, முதலமைச்சருக்குக் கடிதம் எழுது என்று சொன்னேன்.
அவனது எதிர்காலத்திற்கு வாழ்த்தையும் கேட்டு அக்கடிதத்தில் பெற்றுள்ளான். எங்கள் கடிதத்தைப் படித்து அடுத்த நிமிஷமே எவ்வளவோ பணிகளுக்கு இடையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி, என் மகனை உற்சாகப்படுத்தும்விதமாக வாழ்த்தி இருக்கிறார்.
"நான் ஏதோ ஆர்வத்தில் கடிதம் எழுதினேன். அவர் அதைப் படித்துப் பார்ப்பார் எனக்கு பதில் போடுவார் என நினைக்கவே இல்லை. ஆனால், சி.எம். என் கடிதத்தை மதித்து எனக்கு வாழ்த்துக் கூறி கடிதம் போட்டதை என்னால் இப்போதுகூட நம்பவே முடியவில்லை" என்கிறார் மாணவன் ஹரிஷ் குமரன்.
தொடர்ந்து பேசிய ஹரிஷ் குமரன், "அவர் பதவிக்கு வந்த பிறகு பலநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகிறார். அவருக்கு என் கடிதத்தை எல்லாம் படிக்க நேரம் கிடைத்திருக்கிறது என்பதே மகிழ்ச்சி.
என்னைப் போன்ற மாணவர்களின் சின்னச் சின்ன ஆசைகளுக்கு எல்லாம் மதிப்பளித்து பதில் தருவது வியப்பாக இருக்கிறது. அவருக்கு என் மிகப்பெரிய நன்றி" என உணர்ச்சிவசப்படுகிறார் ஹரிஷ்.
இன்றைக்கு மாணவனாக உள்ள ஹரிஷ், வருங்காலத்தில் ஹரிஷ் குமரன் ஐஏஎஸ் ஆக நம் வாழ்த்துகள்!












Click it and Unblock the Notifications