அன்பான அணுகுமுறை பயிற்சி! ஒரு உயிரை காப்பாற்றிய காவலர் கங்கன்! நேரில் அழைத்து பாராட்டிய இறையன்பு!
பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு தலைமைச் செயலாளர் பாராட்டு.
சென்னை: அன்பான அணுகுமுறை பயிற்சியின் கீழ் பெண் ஒருவரது உயிரை காப்பாற்றிய முதல் நிலை காவலரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.
இது தொடர்பான விவரம் வருமாறு;

சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில், காவலர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில் காவல் துறை சார்பில் "அன்பான அணுகுமுறை" முன்னோடிப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் இரண்டாவது பயிற்சியில் பெரியபாளையம் காவல் நிலைய முதல் நிலை காவலர் கங்கன் (Gr.1.810) சமீபத்தில் கலந்து கொண்டார்.
தன்னுடைய வசிப்பிடமான திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோகிலா (வயது 60) க/பெ காசி என்பவர் மாடு மிதித்து மூச்சுப் பேச்சே இன்றி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவரை சுமார் 500 மீட்டர் தூரம் தோளில் சுமந்து, மெயின் ரோட்டுக்கு கொண்டு சென்று, உள்ளங்கை உள்ளங்கால் சூடு பறக்க தேய்த்தும், இருதயம் அருகே விட்டு விட்டு அழுத்தம் கொடுத்தும், மூச்சு வரவைத்து முதலுதவி அளித்தார்.
அதன் பின் தனது இரு சக்கர வாகனத்தில் செந்தில்குமார் என்பவர் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உறவினர்கள் வந்ததும் அவர்களிடம் கோகிலாவை ஒப்படைத்தார். தனக்கு அளிக்கப்பட்ட சிறிய ஓய்வு நேரத்தில் ஓர் உயிரைக் காப்பாற்ற காரணமாக இருந்த முதல் நிலை காவலர் கங்கனை தலைமைச் செயலாளர்இறையன்பு, நேரில் அழைத்து புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications