கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தும் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா.. புதிய அறிவிப்புகளை செயல்படுத்த ரெடி!
சென்னை: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்துகிறார். ஜூன் 11 முதல் மாவட்ட கலெக்டர்களுடன் நடைபெற்று வரும் ஆலோசனை இன்றுடன் நிறைவடைகிறது.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா. மேலும், திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின், அரசின் புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி வெவ்வேறு தேதிகளில் 4 நாட்கள் நடைபெற்றுவந்த கூட்டம் இன்று நிறைவடைகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மானியக் கோரிக்கைகளின் போது அறிவிக்கப்படும் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட வாரியாக, மண்டல வாரியாக அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
வரும் 24ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இதில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவிருக்கிறது. இதற்கு முன்னேற்பாடாக தான் தற்போது நடந்து வரும் ஆய்வு கூட்டம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புதிய அறிவிப்புகள் வெளியிடுவதற்கும், அதனைச் செயல்படுத்துவதற்கும். உதவிகரமாக இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி முதல் நாளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா.
13ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டத்தில் 12 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றறனர். கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று கடைசி நாளில், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications