கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி.. 2 வயது குழந்தை மீது டிவி விழுந்து.. மூக்கில் பலத்த காயமடைந்து பலி
சென்னை: கீழ்ப்பாக்கம் அருகே இரண்டு வயது பெண் குழந்தை மீது டிவி விழுந்ததால் அக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சென்னை சேலையூரில் டிவி விழுந்து 3 வயது குழந்தை இறந்த நிலையில் இது இரண்டாவது சம்பவமாக நடந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் சூளைமேடு தெருவைச் சேர்ந்தவர் மாதர் மொய்தீன். இவருக்கு 2 வயதில் நஷியா பாத்திமா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் வீட்டில் 6 அடி பீரோவுக்கு அருகில் பழைய தொலைக்காட்சி இரண்டு அடி சிறிய நாற்காலியின் மேல் வைக்கப்பட்டு இருந்தது.

நாற்காலி
இந்த நிலையில் பீரோவின் மேலிருந்து ஒரு பூனை தொலைக்காட்சி மேல் குதித்துள்ளது. அப்போது தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த நாற்காலி சரியான நிலையில் இல்லாததால் தொலைக்காட்சி கீழே விழுந்தது.

மூக்கில் பலத்த காயம்
இதில் தரையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தின் மீது விழுந்து மூக்குப் பகுதியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியில் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சவக்கிடங்கு
அதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி ஜி5 காவல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்றதொரு சம்பவம் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நிகழ்ந்தது.

3 வயது குழந்தை
சென்னை சேலையூரில் அகரம் பகுதியில் ஒரு வீட்டின் அலமாரியில் செல்போனுக்கு சார்ஜ் போட்டு வைத்திருந்தது. அதே அலமாரியில் டிவி பெட்டியும் இருந்தது. அப்போது செல்போனுக்கு அழைப்பு வந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் குழந்தை ஓடி சென்று அந்த போனை எடுத்தது. சார்ஜ் போட்டிருந்த வயர் டிவியில் மாட்டி அது 3 வயது குழந்தை மீது விழுந்ததில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications