மதுரையில் தேர்தல் தேதி மாறுமா? உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு
சென்னை: மதுரையில், தேர்தல் தேதியை மாற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
ஏப்ரல் 18ம் தேதி, மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. மதுரையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழாவில் தமிழகம் முழுக்கவிருந்து பக்தர்கள் லட்சக் கணக்கில் பங்கேற்பார்கள்.

எனவே ஏப்ரல் 18ம் தேதி, லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வருவது, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகும் எனக்கூறி அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏப்ரல் 18 சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரையில் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரியும், பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றக் கோரியும் இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
விசாரணையின்போது, சித்திரை திருவிழாவிற்காக, வாக்களிக்கும் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள தேவாலயங்களுக்கு சுதந்திரமாக சென்று வர நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எந்த காரணத்திற்காகவும் வாக்குச்சாவடிகளை மாற்ற இயலாது என்றும் கூறிவிட்டது. இதையடுத்து 2 வழக்குகளிலும் நாளை தீர்ப்பு வழங்குவதாக ஹைகோர்ட் இன்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications