சித்ரா தற்கொலை: உரிய விசாரணை நடக்கிறது... தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - ஜெயக்குமார்
மறைந்த நடிகை சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்று சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இதற்கு பதில் சொல்ல முடியாது. காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள
சென்னை: சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பான வதந்திகளுக்கும் ஹேஸ்யங்களுக்கும் பதில் சொல்ல முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா இரு தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் சித்ரா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் கூறியுள்ளனர்.
தனது மகள் கோழையல்ல என்றும் அவரை அடித்து கொன்று விட்டதாகவும் சித்ராவின் கணவர் மீது குற்றம் சாட்டினார் அவரது தாயார் விஜயா.

போலீஸ் தகவல்
அதே நேரத்தில் இது தற்கொலைதான் என்று உடற்கூறாய்வுக்குக் பிறகு காவல்துறையினர் தெரிவித்தனர். சித்ராவின் தாயாரும், சித்ராவின் கணவரும் மாறி மாறி கொடுத்த மன அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹேம்நாத்திடம் மூன்றாவது நாளாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

வரதட்சணை கொடுமையா?
இந்த நிலையில் சித்ராவிற்கு வரதட்சணை கொடுமை எதுவும் நடைபெற்றுள்ளதா என்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஒ விசாரணை மேற்கொண்டுள்ளார். ஹேமந்த்திடமும், சித்ராவின் அம்மா விஜயாவிடமும் நடத்தி வரும் விசாரணை முடிவில்தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

சித்ராவின் செல்போன்
சித்ராவின் செல்போன் முக்கிய ஆதாரமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூரில் ஒரு கடைத் திறப்புவிழாவுக்கு சென்றபோது, அறிமுகமான ஒரு விஐபி சித்ராவின் செல்போனுக்கு தினசரியும் மெசேஜ் அனுப்பியுள்ளார். பல குறுஞ்செய்திகள் சித்ராவின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதால் அதை மீட்க சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஜெயக்குமார் பதில்
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், மறைந்த நடிகை சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்று சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இதற்கு பதில் சொல்ல முடியாது என்றார்.

போலீஸ் விசாரணை
சித்ராவின் தற்கொலை தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சித்ராவின் மரணத்தில் உள்ள மர்மம் விரைவில் விடுபட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாகும்.












Click it and Unblock the Notifications