கிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்!
Recommended Video
சென்னை: நடிகர் மற்றும் எழுத்தாளர் கிரேஸி மோகனின் மறைவு நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு என திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் இன்று பிற்பகல் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.
தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையில் கிரேஸி மோகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
வெற்றிலை, பாக்கு, சீவல் போல .. காலாகாலத்துக்கும் நின்று மணம் வீசும்.. கிரேஸியின் காமெடி!
திரைத்துறையினர் அதிர்ச்சி
கிரேஸி மோகனின் திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முகம் சுளிக்காதபடி வசனங்கள்
கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பரும் அவருடன் இணைந்து பல நாடகங்களில் பணியாற்றியாவருமான எஸ்வி சேகர், அவர் குறித்து பகிர்ந்து கொண்டது, மக்கள் முகம் சுளிக்காத வகையில் வசனங்களை எழுதியவர். கிரேஸி மோகனின் நாடகங்கள் குழந்தைகளுடன் பார்க்கும் வகையில் இருக்கும்.
எதிரிகளே கிடையாது
நகைச்சுவை நடிகர், வசனகர்த்தாவான கிரேஸி மோகன் சிறந்த ஓவியர். கடவுள் படங்களை தத்ரூபமாக வரையக்கூடியவர். கிரேஸி மோகன் கூட்டுக்குடும்பத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். கிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது இவ்வாறு எஸ்வி சேகர் கூறினார்.
அதிக ஜோக்குகள் கூறுவார்
கோபம் வரும்போது அதிகமாக நகைச்சுவைகளை கூறி சிரிக்க வைப்பவர் கிரேஸி மோகன் என நடிகர் சார்லி கூறினார். கிரேஸி மோகன் மறைவு நாடக உலகிற்கும் திரைத்துறைக்கும் பேரிழப்பு என்றும் அவர் கூறினார்.
கறுப்பு நாள்
நடிகர் மோகன் ராம், நாடகத்துறையின் கறுப்பு நாள் இன்று என தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மாபெரும் கலைஞன் கிரேஸி மோகன் இழப்பு நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு என நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார்.
சிரிப்பு மருந்து கொடுத்தவர்
இதயத்திற்கு சிரிப்பு மருந்து கொடுத்தவர் கிரேஸி மோகன். நம் இதயத்திற்கு சிரிப்பு மருந்து கொடுத்தவரின் இதயம் இன்று நின்று போய்விட்டது என இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார்.