சர்வதேச அளவில் வெடிக்கும் சாம்சங் விவகாரம்.. உள்ளே வரும் உலக தொழிலாளர் அமைப்பு? என்ன நடக்கிறது
சென்னை: சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவில் வெடித்துள்ளது. சாம்சங் நிறுவன போராட்டம் தொடர்பாக சிஐடியூ தொழிலாளர் அமைப்பு, இப்போது சர்வதேச தொழிலாளர் அமைப்புக்குக் கடிதம் எழுதியுள்ளது. அந்த 3 பக்க கடித்ததில் பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் என்ற பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

போராட்டம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் குதித்தனர். மொத்தம் 16 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாகப் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்த போதிலும் தீர்வு எட்டப்படவில்லை. அதேநேரம் குழந்தைகளுக்கான பள்ளி வசதி, போனஸ் என 15 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சிஐடியூ தொழிலாளர் யூனியன் அமைக்கும் கோரிக்கை மட்டும் ஏற்கப்படவில்லையாம். அரசியல் தொடர்புடைய அமைப்பாக இருப்பதால் சிஐடியூ தொழிலாளர் யூனியனை அங்கீகரிக்க முடியாது என்று சாம்சங் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், சிஐடியூ தொழிலாளர் யூனியனுக்கு அனுமதி தரும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
சர்வதேச அளவில்: இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது. முதலில் போலீசாரை தள்ளிவிட்டதாகத் தொழிலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும், பலரும் கைது செய்யப்பட்ட போதிலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி உண்டு எனக் குறிப்பிட்டு நீதிபதிகள் அவர்களை விடுவித்தார். இதனால் அங்குப் பதற்றம் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே சாம்சங் தொழிலாளர் போராட்டம் இப்போது சர்வதேச அளவில் வெடித்துள்ளது. சாம்சங் தொழிலாளர் போராட்டம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு சிஐடியூ அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவருக்கு சிஐடியூ எழுதியுள்ள இந்த 3 பக்க கடிதத்தில் மொத்தம் 9 பாயிண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதம்: அதில் சாம்சங் இந்தியா தொழிலாளர் யூனியன் பதிவு செய்யத் தொழிலாளர் நலத்துறை பதிவாளர் மறுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.. கடந்த ஜூன் 26ஆம் தேதி பதிவு செய்யக் கடிதம் தரப்பட்ட நிலையில், இதுவரை பதிவு செய்யப்படாமல் தாமதம் செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனமும் தொழிலாளர் வாரியத்தை அங்கீகரிக்க மறுப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் ஊழியர்கள் சங்கத்தின் பெயரில் உள்ள சாம்சங் என்ற வார்த்தை கூட அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டிரைக்: கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டப்படி உரிய நோட்டீஸ் அளித்து ஸ்டிரைக் நடத்தி வருவதாகவும் அதில் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் 1810 பேரில் 1450 பேர் ஈடுபட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்த போதிலும் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தொழிலாளர் சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் போராடும் தொழிலாளர்களைத் தமிழகக் காவல்துறை தடுக்கிறது என்றும் போராட்ட பந்தலை அகற்றி,, கைது நடவடிக்கை மேற்கொண்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கும் சி.ஐ.டி.யூ மத்திய தலைமை மூலமாகப் புகார் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications