காங்கிரஸ்காரர்களை ரோட்டில் ஓடஓட விரட்டி தாக்கிய திமுகவினர்.. போர்க்களமாக மாறிய மயிலாடுதுறை
மயிலாடுதுறை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் கூட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆட்சியமைக்க இன்னும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தான் ஆளுநரை கண்டித்து தவெக கூட்டணி கட்சியான காங்கிரஸ்காரர்கள் மயிலாடுதுறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த திமுகவினர், காங்கிரஸ் கட்சிக்காரர்களை ரோட்டில் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். எந்த கட்சிகளும் இவ்வளவு தொகுதியில் வெற்றி பெறவில்லை.

அதேவேளையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியானது. ஆனால் மெஜாரிட்டி கிடைக்காததால் விஜய்யால் இன்னும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இதையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சி, தவெகவின் கூட்டணிக்கு தாவியது. இருப்பினும் கூட மெஜாரிட்டிக்கு இன்னும் 5 எம்எல்ஏக்களின் பலம் குறைவாக உள்ளது. இதனால் விஜய் 2 முறை ஆட்சியமைக்க உரிமை கோரினாலும் கூட ஆளுநர் அனுமதி கொடுக்கவில்லை.
இந்நிலையில் தான் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பானுசேகர் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டனர். அதோடு விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பிறகு அவர்கள் கலைந்து செல்ல முயன்றனர். இந்த சமயத்தில் மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மருது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட் உள்பட திமுகவினர் அங்கு வந்தனர். காங்கிரஸ் கட்சியினரிடம் மோதலில் ஈடுபட்டனர். ஏற்கனவே திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு தவெக பக்கம் காங்கிரஸ் சாய்ந்த நிலையில் இந்த வார்த்தை மோதல் கைக்கலப்பாக மாறியது.
திமுகவினர், காங்கிரஸ் கட்சியினரை விரட்டி விரட்டி தாக்கினர். காங்கிரஸ் நிர்வாகிகள் ரோட்டில் ஓடினாலும் பின்னால் விரட்டி சென்று கடுமையாக தாக்கினர். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பானுசேகர், பொறுப்பாளர் ராஜா, அன்பழகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ராஜா காயமடைந்தனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினரின் கொடிகளை பிடுங்கி சாலையில் வீசி எறிந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications