வழக்கறிஞர் மதிவதனியை நோக்கி ஆவேசமாக பாய்ந்து வந்த அர்ஜுன் சம்பத்.. டிவி விவாத நிகழ்ச்சியில் பரபரப்பு
சென்னை: தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இடையே மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் மதிவதனி பேசிக் கொண்டிருக்கும்போது அர்ஜுன் சம்பத் ஆவேசமாக பாய்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்பில் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன், விசிக சார்பில் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ், திராவிடர் கழகம் சார்பில் வழக்கறிஞர் மதிவதனி, பாஜக சார்பில் கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் ஆகியோர் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும், பல்வேறு அரசியல் இயக்கங்கள் சார்பில் ஏராளமானோர் பார்வையாளர்களாகவும் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி பேசும்போது, ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பாய்ந்து வந்தார். பேசிக்கொண்டிருந்த மதிவதனிக்கு முன்பாக வேகமாக எழுந்து சென்று ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.
கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள், செருப்பை எடுத்து வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெறியாளர் மற்றும் விவாதத்தில் பங்கேற்றவர்கள் அர்ஜுன் சம்பத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மேடைக்கு வந்து மோதல் ஏற்படாமல் தடுத்தனர். திராவிடர் கழகத்தினர், அர்ஜுன் சம்பத் வெளியேற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து மதிவதனி பேசுகையில், "செருப்பை வைத்து அரசியல் செய்வது பாஜக, புத்தகம் படித்து முன்னேறச் சொல்வது திராவிட இயக்கம். உங்கள் செருப்பு அரசியலால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications