“சடன் ப்ரேக்”! ஒரே நாள்.. வெட்ட வெளிச்சமான பாஜக பஞ்சாயத்து! அம்பலமான கோஷ்டி பூசல்!
சென்னை: அதிமுக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசலை தொடர்ந்து தமிழ்நாடு பாரதிய ஜனதாவிலும் நிர்வாகிகள் இடையேயான மோதல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்ற தேசிய பாஜக தலைமையின் இலக்கை செயல்படுத்த தமிழ்நாடு பாஜக நிர்வாகம் முழு மூச்சுடன் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசலால் ஏற்பட்டிருக்கும் காலியிடத்தை தனதாக்கிக் கொண்டு ஆளும் திமுக அரசுக்கு எதிராக பாஜக அறிக்கைகள் வெளியிடுவதுடன் போராட்டங்களை நடத்தி வருகிறது.
சூர்யா சிவா ஆபாச பேச்சு.. பாய்ண்டை பிடித்த திமுக! கையை வெட்டாதீங்க - அண்ணாமலை, குஷ்புவிடம் கேள்வி
இணைந்த பிரபலங்கள்
இதனால் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக பாஜக மாறி வருகிறது. அடுத்ததாக பாஜகவின் ஆபரேசன் சவுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2024 லோக் சபா தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு பாஜக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அக்கட்சிக்கு தலைவலியாக மாறி இருக்கிறது உட்கட்சிப் பூசல்.
காயத்ரி - சூர்யா
மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க சினிமா பிரபலங்கள், பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கட்சியில் சேர்க்கும் தேசிய பாஜகவின் செயல்திட்டத்தின்படி தமிழ்நாட்டிலும் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களை பாஜக சேர்த்து இருக்கிறது. அந்த வகையில் நடிகையும் நடன கலைஞருமான காய்த்ரி ரகுராம், திமுக மூத்த தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா ஆகியோர் பாஜகவில் இணைக்கப்பட்டனர்.
காயத்ரி விமர்சனம்
இந்த இருவரால் தற்போது பாஜக உட்கட்சிப் பூசல் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. காயத்ரி ரகுராம் தொடர்ந்து மாநில பாஜக தலைமையை விமர்சித்து வருகிறார். பாஜக ஐடி விங் நிர்வாகியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சூர்யா சிவா - பாஜகவின் டெய்சியை செல்போனில் அபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியானது.
திருச்சி சூர்யா மீது விமர்சனம்
இதனை ட்விட்டரில் பகிர்ந்த காயத்ரி ரகுராம், "பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு.
ஜால்ரா ஆதரவாளர்கள்
பொது இடத்தில் அழுக்குத் துணிகளை துவைக்கிறோம் என்று சொல்கிறார்கள் செ & கோ ட்ரோல்ஸ். ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜால்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள் வார் ரூம், செல்வா & கோ.
எச்சரிக்கை
புகார் எழுந்தபோது என்ன நடந்தது? நான் கோபமாக இருக்கிறேன். களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது.
திமுக ஸ்லீப்பர் செல்கள்
கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவரையும் தாழ்மையான வேண்டுகோள். திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன்.. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
காயத்ரி மீது நடவடிக்கை
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அண்ணாமலை, "தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்." என்று கூறி உள்ளார்.
சூர்யா சிவா சஸ்பெண்ட்
அதேபோல், "பாஜக திருமதி டெய்சி சரண், திரு சூர்யா சிவா அவர்கள் இருவரின் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் சம்பவத்தை விசாரித்து கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை திரு சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்." என்று அண்ணாமலை உத்தரவிட்டு உள்ளார்.