சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்!
சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் பாரில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோதமாக விடிய விடிய அனுமதிக்கப்படும் அந்த பாரில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கும் மது வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பாரில் இரவில் குடித்துவிட்டு நடனம் ஆடிக் கொண்டிருந்த போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அவர்களை வெளியில் அனுப்பினர். வெளியே வந்த இரு தரப்பினரும் ஹோட்டல் அருகே உள்ள மற்றொரு கடை வாசலில் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஒரு தரப்பினரான இளம்பெண்கள் மூன்று இருசக்கர வாகனங்களிலும் மற்றொரு தரப்பினர் சொகுசு காரிலும் இரு தரப்பினரும் அப்பகுதியை விட்டு புறப்பட்டனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கற்களை காரின் மீது வீச முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சொகுசு காரில் வந்த நபர்கள் காரை வேகமாக இயக்கி சென்று அந்த இளம்பெண்கள் மீது மோதியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மீது மோதியதில் 18 வயதுடைய யான்சி என்கிற பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவருடன் வந்த 17 வயதுடைய அவருடைய தோழிக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து சொகுசு காரில் வந்து இடித்த நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் யான்சி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் மீட்பு முகாமில் வசித்து வருவதும் கடந்த மே 19 ஆம் தேதியன்று தனது பள்ளி தோழியான திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பிதாவை சந்திக்க வந்த நிலையில் அவர் இல்லாததால் தம்பிதாவின் பக்கத்து ஊரை சேர்ந்த அவரது சிறு வயது தோழி பவுசியா தீபிகா என்பவரது வீட்டில் கடந்த 10 நாட்களாக யான்சி தங்கி இருந்தது தெரியவந்தது.
கடந்த 28 ஆம் தேதி மாலை சினிமா பார்க்கச் செல்வதாக கூறி வெளியே சென்று மறுநாள் 29ஆம் தேதி காலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் பவுசியாவின் தாய் திட்டியதாகவும் அதனால் வீட்டை விட்டு இவர்கள் வெளியேறிய நிலையில் அவர்கள் பாருக்கு சென்றபோது இந்த விபத்து நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் சொகுசு காரில் சென்று இடித்துச் சென்ற நபர் சுமன் சக்திவேல் என்று தெரியவந்த நிலையில் அவர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள ஹோட்டல் மது பாரில், பல ஆண்டுகளாக இரவு நேரங்களில் மது பாரில் 18 வயதுக்கு குறைவான சிறுவர் சிறுமிகள் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் ஹோட்டல் உரிமையாளர் அரசியல் பிரமுகர் மற்றும் பிரபல தொழிலதிபர் என்பதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு அனுமதியை கடந்து வார இறுதி நாட்களில் விடிய விடிய 3 மணி வரை சட்டவிரோதமாக மது பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் சட்டத்தின்படி காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரை நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு உத்தரவை மீறி இந்த ஹோட்டல் அதிகாலை 3 மணி வரை நடந்து வருவதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தத் தனியார் மதுபான பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட யான்சிக்கு 18 வயது தான் ஆகிறது. அதேபோல் உயிருக்குப் போராடி வரும் தீபிகாவுக்கு 17 வயது தான் ஆகிறது. இதுபோல் பவுசியா, தபிதா, அஷ்சு ஆகியோரும் 17 முதல் 18 வயது உடையவர்கள் என்று போலீசார் விசாரணையில் உறுதியாகி உள்ளது.
ஹோட்டலில் பார் நடத்தி வரும் அரசியல் பிரமுகர், சட்டவிரோதமாக பணத்திற்காக சிறுமிகளை போதைக்கு அடிமையாகி அவர்களை போதையில் ஆண் நண்பர்களுடன் தவறான பாதைக்கு செல்ல துணையாக இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது. எனவே பார் உரிமையாளரிடம், சட்டவிரோதமாக சிறுமிகளை பாருக்குள் அனுமதித்தது ஏன், அரசு விதிகளை ஏன் முறையாக பின்பற்றவில்லை என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications