"பல ஆயிரம் ஏவுகணை ரெடி".. ஈரான் என்ற நாடே இருக்காது.. என்னை கொல்ல முயன்றால் அவ்வளவு தான்.. டிரம்பின் பகீர் மிரட்டல்
வாஷிங்டன்: ''என்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் ஈரானை தாக்க தயாராக 1,000 ஏவுகணைகள் 'லோட்' செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்பகட்ட பதிலடிக்கு பிறகு உடனடியாக மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படும். இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.ம் ஈரானின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக சிதைத்து அழிக்க ஒரு வருட காலத்துக்கான நடவடிக்கைக்கு ராணுவம் தயாராக உள்ளது'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே நடந்த போர், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு திறக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா கோபமாகி மீண்டும் தாக்குதலை தொடங்கியது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்ந்த தளங்களை குறிவைத்து தாக்கியது. இப்போது மோதல் நின்றுள்ளது. இருந்தாலும் அமெரிக்கா - ஈரான் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது.
இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஈரான் தன்னை கொல்ல முயற்சி மேற்கொள்வதாக கூறி வருகிறார். குறிப்பாக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''ஈரான் படுகொலை செய்ய துடிக்கும் நபர்களின் பட்டியலில் என்னுடைய பெயர் தான் முதலிடத்தில் உள்ளது'' என்று கூறியிருந்தார். இதுபற்றி ஈரான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். தன்னை கொலை செய்தாலோ அல்லது அதற்கான முயற்சியை ஈரான் மேற்கொண்டால் 1,000 ஏவுகணைகளை கொண்டு அந்த நாட்டை தாக்குவோம். இதற்காக ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன என்று பகிரங்கமாக மிரட்டி உள்ளார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''ஈரானை தாக்கும் நோக்கில் 1,000 ஏவுகணைகள் ரெடியாக 'லோட்' செய்து வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பதவியில் இருக்கும் அதிபரை அதாவது என்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈரான் ஈடுபட்டால் அதற்கு பதிலடியாக இந்த ஏவுகணைகள் ஈரானை நோக்கி குறிவைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த ஆரம்பகட்ட பதிலடிக்கு பிறகு உடனடியாக மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படும். இதற்கு தேவையான அறிவுறுத்தல்களை ஏற்கனவே அமெரிக்க ராணுவம் பெற்றுள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்மூலம் ஈரானின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக சிதைத்து அழிக்க ஒரு வருட காலத்துக்கான நடவடிக்கைக்கு ராணுவம் தயாராகவும், அதற்கான திறனுடனும் உள்ளது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications