நடுங்கிய தெலங்கானா.. ஒரே இரவில் போக்சோ புகாரளித்த சிறுமி உள்பட 6 பேரை கொன்ற இளைஞர்.. வெறிச்செயல்
ஹைதராபாத்: தெலங்கானாவில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த 35 வயது நிரம்பிய இளைஞர் தனது மனைவி, 2 மகன்கள், தன்மீது பாலியல் புகார் அளித்த சிறுமி, அவரது தாய், தாய்மாமன் என்று மொத்தம் 6 பேரை ஒரே இரவில் கொலை செய்த சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இந்த கொடூர கொலைகளுக்கு பின்னால் இருக்கும் ராஜ்குமார் யார்? என்ன நடந்தது? என்பது பற்றிய நடுங்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் ஷாபாத் பகுதியில் வசித்து வந்தவர் ராஜ்குமார் (வயது 35). இவரது மனைவி பெயர் பார்வதி சரிதா. இவருக்கு வயது 30. இவர்கள் 2 பேரும் கடந்த 2018 ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள். 2 மகன்கள் பிறந்தனர். மகள் கைக்குழந்தையாக இருந்தேபோதே இறந்தார்.

இதனால் ராஜ்குமார் - பார்வதி சரிதா தம்பதி 2 மகன்களுடன் வசித்து வந்தனர். மூத்த மகனுக்கு வயது 4. இரண்டாவது மகன் வயது ஒன்று. இந்நிலையில் தான் கடந்த மே மாதம் ராஜ்குமார் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.
17 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பின்தொடர்ந்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் மே 16ல் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரை தொடர்ந்து ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். அவர் பாலியல் தொல்லை கொடுத்த சிறுமிக்கு 18 வயது நிரம்பிவில்லை. மைனர் பெண் என்பதால் ராஜ்குமார் மீது 'போக்சோ' பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராஜ்குமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ராஜ்குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 20 ஆயிரம் பிணைத்தொகை வழங்க கூறி ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் தன் மீது புகார் அளித்த சிறுமி உள்பட அவரது குடும்பத்தினரை தீர்த்து கட்ட திட்டமிட்டார். மேலும் கொலை செய்தால் தனது குடும்பத்தினர் கஷ்டப்படுவார்கள் என்று நினைத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி தனது குடும்பத்தையும் கொல்ல திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவி பார்வதி சரிதா, 2 மகன்கள் ஆகியோரை கழுத்து நெரித்து கொலை செய்தார். பிறகு வீட்டில் இருந்து தன்மீது பாலியல் புகார் அளித்த சிறுமியின் வீட்டிற்கு காரில் சென்றார். மொத்தம் 6 கிலோமீட்டர் தொலைவு பயணித்து புகாரளித்த சிறுமியின் வீட்டிற்கு செனறார். வீடு புகுந்து அங்கு இருந்த சிறுமியை கொலை செய்தார். அதோடு அவரது 45 வயது நிரம்பிய தாய், 65 வயது நிரம்பிய தாய்மாமன் ஆகியோரையும் படுகொலை செய்தார். புகாரளித்த சிறுமியின் சகோதரிக்கு 20 வயது ஆகிறது.அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவரை விட்டு விட்டு சென்றார்.
ஒரே இரவில் ராஜ்குமார் தனது மனைவி , 2 மகன்கள், தன்மீது பாலியல் புகார் அளித்த 17 வயது சிறுமி, அவரது தாய், தாய்மாமன் என மொத்தம் 6 பேரை கொலை செய்துள்ள சம்பவம் தெலங்கானாவை அதிர வைத்துள்ளது. இந்த படுகொலைகளை நிழத்திய ராஜ்குமார் தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications