லோக்சபா தேர்தலில் படு தோல்வி.. அடுத்து வருது உள்ளாட்சி.. நிர்வாகிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
அஇஅதிமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
சென்னை: தமிழக அரசியல் தகதகவென கொதிக்க ஆரம்பித்துவிட்டது.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு அதிமுக கொஞ்சம் அடக்கியே வாசித்து வருகிறது. ஒருபுறம் மத்திய அமைச்சரவையில் சீட் இல்லாமல் போய்விட்டதே, தமிழகத்துக்கான அங்கீகாரமே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளோமே என்ற மனக்குமுறல் நீடித்து வருகிறது.
மற்றொரு பக்கம் திமுக படுவேகம் எடுத்து வருகிறது. எப்போ, என்ன செய்யுமோ, ஆட்சிக்கு பாதிப்பு வருமோ, என்ற பீதியும் அடிவயிற்றில் கிளம்பி உள்ளது.
ஓய்வறியாய் சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்!
எம்எல்ஏக்கள்
இதற்கு நடுவில் அதிமுக எம்எல்ஏக்களை திமுக தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது என்ற தகவல் அடிக்கடி வந்து கொண்டிருப்பதால், எரியிற எண்ணெயில் லிட்டர் லிட்டராக நெய்யை ஊற்றுவதுபோல் உள்ளது!
பொறுப்பாளர்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுக நிர்வாகிகள் எல்லாரும் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல்வரின் வீட்டில் இன்று காலை அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் இப்படி எல்லாருமே ஒன்றுகூடினர். அவர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சட்டமன்ற தேர்தல்
எம்பி தேர்தலில் ஒரே ஒரு இடத்தை தவிர மற்ற இடங்களில் ஏன் தோற்று போனாம், சட்டமன்ற தேர்தலில் 9 இடங்களை தவிர மற்றவற்றில் ஏன் மண்ணை கவ்வினோம் என்பது குறித்து முதல்வர் இவர்களிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
விரிவான ஆலோசனை
மேலும் பிரச்சார சமயத்தில் தொகுதிகளில் ஏற்பட்ட குளறுபடிகள், பணப்பட்டுவாடாக்கள், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைத்ததா, இல்லையா, என்பது குறித்தெல்லாம் நிர்வாகிகள் முதல்வரிடம் புகாராக தெரிவித்துள்ளார்களாம். அத்துடன், விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓ.பன்னீர்செல்வம்
மேலும் சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை எப்படி கையாள்வது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.