"எம்எல்ஏ என்னவோ திமுகதான்.. ஆனால்".. ஆம்பூரையே அதகளப்படுத்திய எடப்பாடியார்..!
சிறுபான்மையினர் நலன்குறித்து முதல்வர் உறுதி தந்துள்ளார்
சென்னை: "மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மக்களிடம் வாக்கு சேகரிக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள் அவர்களின் எண்ணம் நிறைவேறாது. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி தந்துள்ளார்.
இந்த 4 வருட காலத்தில் சிறுபான்மையினர் நலனில் அதிமுக அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.. பிரச்சாரம் என்றாலும், விழாக்கள் என்றாலும் சரி, நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு குறித்தும், அதற்கு பக்கபலமாக தமிழக அரசு விளங்கி வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தெரிவித்து கொண்டே வருகிறார்.
"எம்மதமும் சம்மதம்... பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் என்ன செய்தோம் என்பதே முக்கியம்... முதலமைச்சர் என்பது ஒரு பணிதான்... நான் உங்களில் ஒருவனாக நான் பேசுகிறேன்... நானும் சாதாரணமானவன்தான்.. பதவி ஆசை தேவை, பதவி வெறி இருக்கக்கூடாது. அது கண்ணை மறைத்துவிடும்" என்று அடிக்கடி சொல்வார் முதல்வர்.
சிறுபான்மையினர்
அதேபோல ஒரு விழாவில், "கடந்த 30 வருஷத்துக்கும் மேலாக தொடர்ந்து சிறுபான்மையினருக்கு அரணாக அதிமுக அரசு இருந்து வருகிறது... அந்த வகையில் இந்த அரசு சிறுபான்மையின மக்களை தொடர்ந்து பாதுகாக்கும் என உறுதியளிக்கிறேன்.. அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.. மக்களிடையே பிளவு ஏற்படுத்திட யார் முயன்றாலும், இந்த அரசின் முயற்சிகளாலும், உங்களது ஒத்துழைப்பினாலும், அது முறியடிக்கப்படும் " என்ற நம்பிக்கை வார்த்தைகளை அதிகம் சொன்னவர் எடப்பாடியார்.
முக ஸ்டாலின்
இந்நிலையில், இன்றும் ஒரு அதேபோன்ற வாக்குறுதியை அம்மக்களுக்கு அளித்துள்ளார்.. ஆம்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், "திமுக ஆட்சி காலத்தில், முக ஸ்டாலின் மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை... ஒரு குறையும் தீர்க்கவில்லை... ஆனால், இப்போது பொதுமக்களிடம் சென்று குறைகளை கேட்கிறார்.. திமுக ஆட்சியில் செய்யாததை இப்போ எப்படி அவர் செய்வார்?
திமுக எம்எல்ஏ
ஆம்பூர் எம்எல்ஏ திமுக கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அதிமுக அரசுதான் ஆம்பூர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி உள்ளது... இந்த நகரில் குடிநீர் பிரச்சனைகள் கேட்கப்பட்டுள்ளது.. சிறுபான்மை மக்களுக்காக ரமலான் நோன்பு கஞ்சிக்காக தமிழகத்தில் உள்ள சுமார் 3000 பள்ளிவாசல்களுக்கு 5,545 மெட்ரிக் டன் அரிசி வழங்கி வருகிறது. ஹஜ் புனித பயணத்திற்கு 6 கோடியில் இருந்து பத்து கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
வதந்திகள்
சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பிற்கான அரசாக தமிழக அரசு இருக்கிறது.. இப்போதும் தமிழகம் அமைதிப் பூங்காவாக நிலவி வருகிறது... மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களிடம் வாக்கு சேகரிக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள் அவர்களின் எண்ணம் நிறைவேறாது. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர். சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என எதிர்க்கட்சியினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்" என்றார்.