தேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேச வேண்டாம்.. அமைச்சர்களை தனித்தனியே அழைத்து முதல்வர் கண்டிப்பு
சென்னை: தேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேசக் கூடாது என அமைச்சர்களை தனித்தனியாக அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கண்டித்தார்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னர் துக்ளக் பொன் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பலர் ரஜினிக்கு எதிராக விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அதில் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் ரஜினிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளார். இதன் காரணமாக ஆளும் கட்சியினரிடையே ஒரு மித்த கருத்து இல்லை என பேசப்படுகிறது.

சசிகலா
அது போல் பாஜக, சசிகலா குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்த போதும் இது போல் முரணாகவே கருத்து தெரிவித்தனர். இதனால் அதிமுக- பாரதி ஜனதா கட்சி கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரங்கள் அனைத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அறிவுரை
இதையடுத்து அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்த முதல்வர் முடிவு செய்தார். அதன்படி இந்த விவகாரங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களை நேற்று தனித்தனியாக அழைத்து பேசினார். அப்போது அவர் தேவையில்லாத எந்த கருத்துகளையும் பொது வெளியில் பேச வேண்டாம் என அவர் அறிவுறுத்தியிருந்தார்.

முதல்வர்
அதே வேளையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து மக்கள் மனதில் உள்ள தவறான கருத்துகளை போக்க எது போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

அறிவுரை
உள்ளாட்சி தேர்தலில் தனது ஆதங்கத்தை காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தியது. இதை தொடர்ந்து திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளை காங்கிரஸுக்கு எதிராக மிகவும் காட்டமாக வைத்தனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியும் தனது கருத்துகளை முன் வைத்தது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்ட போது ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இது போன்ற அறிவுரையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications