தாகத்திலிருந்து தமிழகம் விடுபட.. தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை
சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்தது. இதனால் கோடை தொடங்குவதற்கு முன்னரே வெயில் கொளுத்தி எடுத்தது.

கோடை காலத்தில் பெய்ய வேண்டிய மழையும் பெய்யாததால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர்.
டேங்கர் லாரிகளுக்கு கூடுதல் பணம் கொடுப்பதாக கூறினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் , நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டது. சென்னையில் பல்கி பெருகிவிட்ட ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றுமாறு அறிவுறுத்திவிட்டனர்.
இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கல்வி நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை முதல்வர் கேட்டறிந்தார். முன்னதாக ரிப்பன் மாளிகையில் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் வேலுமணி பேசுகையில் தண்ணீர் பிரச்சினையால் ஹோட்டல்கள் எதுவும் மூடப்படவில்லை. ஹோட்டல்களில் வாழை இலை, பாக்கு மட்டைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம். தண்ணீர் பிரச்சினை உள்ளதாக சம்பந்தப்பட்ட ஐடி நிறுவனத்தினர் கூறினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications