சென்னை திரும்பினார் முதல்வர்.. வந்ததும் வராததுமாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி
Recommended Video
சென்னை: அரசு முறை பயணமாக 14 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தது வெற்றி அடைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 28-ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார். முதலில் இங்கிலாந்திற்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் சென்றார்.
அங்கு தொழில் முதலீட்டாளர்களையும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை எடுத்துரைத்தார்.
கால்நடை பூங்கா
முதல்வருடன் அமைச்சர் சி விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இங்கிலாந்து நாட்டில் முன்னணி மருத்துவமனைகள், கால்நடை பூங்கா உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
முதலீட்டார்கள் கூட்டம்
அமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4-ஆம் தேதி நியூயார்க், சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசினார். பின்னர் இங்கிலாந்து சென்றுவிட்டு துபாய் சென்றார். துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ 4200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்வர் முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மகிழ்ச்சி
இந்த நிலையில் முதல்வர் தனது 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு நிகழ்ச்சி மகிழிச்சியை தந்தது.
ஒன்றிணைக்க
வெளிநாட்டு அரசு முறை பயணம் தொடரும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொழிலில் முதலீடு செய்ய பலர் ஆர்வத்தில் உள்ளனர். கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரவுள்ளன. உலகில் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும்.
பதிலடி
அரசு முறை பயணம் வெற்றிக்கரமாக முடிந்துவிட்டது என்றார். முதல்வர், அமைச்சர்கள், துறை செயலாளர்கள் சுற்றுலா சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் முதல்வர், அரசு முறை பயணம் என கூறியுள்ளது அவர்களுக்கு பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.