‘என் தாயை இழிவுபடுத்திவிட்டனர்’ - தழுதழுத்த குரலில் முதல்வர் பழனிசாமி
சென்னை: முதல்வர் பழனிசாமி பிரசாரத்தின் போது, தன் தாய் குறித்து சற்று உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் பேசினார்.
திமுக எம்.பியும் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து, அ.தி.மு.க சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதல்வருக்கே இந்த நிலைமை
இந்த நிலையில், சென்னை திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.குப்பனுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தனது தாயார் குறித்து முதல்வர் தழுதழுத்த குரலில் பேசினார். அதில், "என் தாயைப் பற்றி அவர் எவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் என்று பாருங்கள். ஒரு சாதாரணமான மனிதர் முதலமைச்சராக வந்தால் என்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், உங்களைப் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்? இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தாய்மார்கள் நிலைமை என்னவாகும்? என்று நினைத்துப் பாருங்கள்.
தாயே உயர்ந்தவர்
இதுபோன்று தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனைய வழங்க வேண்டும். என்னுடைய தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி.. இரவு பகல் பாராமல் உழைத்தவர். அவர் இப்போது இறந்துவிட்டார். அவரைப் பற்றி இழிவாக தரக்குறைவாக எப்படி எல்லாம் பேசியுள்ளார். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவன். ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம்.
உங்களில் ஒருவனாக
பெண் குலத்தை பற்றி யார் இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை தருவார். நான் முதல்வராக இருந்து பேசவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவறாக இருந்து பேசுகிறேன். இந்த அரசு மக்களின் பாதுகாப்புக்காக முழுவதுமாக செயல்பட்டு வருகிறது.
வெற்றித் தர வேண்டும்
சாலை வசதி, மருத்துவ வசதி, காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது, குடிதண்ணீர் சரியாக வருகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக இருக்கிறது. எனவே அதிமுகவின் கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.