தமிழர் தொன்மத்தின் சாட்சி கீழடியில் அருங்காட்சியகம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
சென்னை: தமிழர் தொன்மத்தின் சாட்சியமாக திகழும் கீழடியில் ரூ12.25 கோடியில் அருங்காட்சியகம் (அகழ்வைப்பகம்) அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் சங்க கால தமிழரின் வாழ்வியல் சான்றுகள் தோண்ட தோண்ட கிடைத்துக் கொண்டே வருகின்றன.

குவளைகள், பானைகள், முதுமக்கள் தாழிகள், அணிகலன்கள் என மண்ணுக்கு கீழே தமிழர் தம் வாழ்வின் அடையாளங்கள் புதைந்து கிடக்கின்றன. கீழடியில் தற்போது 6-வது கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே கீழடியில் கிடைத்த சங்க கால தமிழர் பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியம் (அகழ்வைப்பகம்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் இன்று கீழடியில் அகழ்வைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார்.

ரூ12.25 கோடியில் 2.10 ஏக்கரில் இந்த அருங்காட்சியம் அமைய உள்ளது. இந்த அருங்காட்சியகம் தமிழர்களின் தொன்மத்தை தலைமுறைகளுக்கும் பாதுகாக்கும் பொக்கிஷமாக திகழும்.












Click it and Unblock the Notifications