தூய்மை பணியாளர் பத்மா.. 45 சவரன் நகையை நேர்மையாக ஒப்படைத்ததற்காக ரூ.1 லட்சம் பரிசு வழங்கிய ஸ்டாலின்!
சென்னை: தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி பாராட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (50). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக பணி செய்து வருகிறார். இவர் நேற்று தி.நகரில் உள்ள மகாராஜா சந்தானம் தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு குப்பையோடு குப்பையாக கிடந்த கவர் ஒன்றை எடுத்து பார்த்தபோது, ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் 45 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரிந்தது. உடனே அதனை தனது மேற்பார்வையாளரிடம் பத்மா ஒப்படைத்து, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் சேர்ப்பித்தார்.

போலீசார் சோதனை செய்தபோது அவை சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது. நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஏற்கனவே பாண்டி பஜார் காவல் நிலையத்தில் சுமார் 45 பவுன் நகையை தொலைத்து விட்டதாக புகார் அளித்து சென்றது தெரியவந்தது.
பின்னர், புகார்தாரரான ரமேஷை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர் பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்று மாலை தியாகராய நகர் சென்றபோது தன் கையில் வைத்திருந்த நகைப்பையை அருகில் இருந்த தள்ளுவண்டி கடையின் மீது வைத்து விட்டு அங்கிருந்து மறந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
நகை மற்றும் ஆவணங்களை சரிபார்த்த போலீசார் பின்னர் ரமேஷிடம் நகைகளை ஒப்படைத்தனர். சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் தங்க நகையை கண்டெடுத்து, அதனை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை போலீசார் வெகுவாகப் பாராட்டினர்.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர் பத்மா, 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்த நிலையில், அதனை அப்படியே காவல் நிலையத்தில் ஒப்படைத்தது பற்றி அறிந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். தூய்மைப் பணியாளர் பத்மாவை இன்று நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார். மேலும், அவரது நேர்மைக்குப் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மா நேற்று (ஜனவரி 11) சென்னை, தியாகராய நகர், வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததை பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 12) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையாக போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு சலானி ஜூவல்லரி சார்பில் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications