"கோவில்களை இடிப்பதாக பொய் சொல்கிறார்கள்".. மீட்டிங்கில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு
சென்னை: திமுக ஐடி விங் நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய விஷயங்களை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
திமுக ஐடி விங் பிரிவு செயலாளராக இருந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்த நிலையில் மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஐடி விங் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் திமுக ஐடி விங் ஆலோசனை கூட்டத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
இதில் திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பல முக்கிய டாஸ்க்குகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். முக்கியமாக ஆட்சிக்கு எதிராக பரவும் பொய்யான செய்திகளை உடனடியாக களைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஐடி விங் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், தமிழ்நாட்டில் சிலர் வதந்திகளை பரப்புவுதை வழக்கமாக வைத்து உள்ளனர். தமிழ்நாடு அரசு கடந்த 8 மாதங்களில் பல முக்கியமான சாதனைகளை செய்து உள்ளது. தேசிய அளவில் கவனமும், பாராட்டும் பெறும் வகையில் நாம் ஆட்சி நடத்தி வருகிறோம். ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் நமது ஆட்சியின் சாதனைகளை மறைக்கும் வகையிலும் திசை திருப்பும் வகையில் செயல்படுகிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 8 மாதங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இருக்கிறது. 8 மாதங்கள் நாம் செய்த சாதனைகளை திசை திருப்ப வேண்டும் என்று சிலர் செயல்படுகிறார்கள். நாம் கோவில்களை இடிப்பதாக பொய் செய்தி பரப்புகிறார்கள். நூற்றுக்கணக்கில் கோவில்களை இடித்துவிட்டோம் என்று பொய் சொல்கிறார்கள்.

கோவில்
அவர்கள் நாம் எங்கே கோவில் இடித்தோம், எப்போது இடித்தோம், ஏன் இடித்தோம் என்றெல்லாம் சொல்வது இல்லை. எந்த ஆதாரமும் இன்றி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். இதை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். ஐடி விங் இதில் கவனம் செலுத்த வேண்டும். இது போன்ற பொய் செய்திகளை உடனே களைய வேண்டும். அறநிலையத்துறை மட்டுமின்றி எல்லா துறையிலும் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

பொய்கள்
அவர்கள் பரப்பும் பொய்கள் வேகமாக பரவுகிறது. அதை நாம் தடுக்க வேண்டும். நாம் முன்னெடுத்து வரும் திட்டங்களை ஆதாரங்களோடு வெளியிட வேண்டும். அதுதான் இவர்கள் பரப்பும் பொய்களுக்கு சரியான பதிலாக இருக்க முடியும். மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும். நாம் நம்முடைய சாதனைகளை சொன்னாலே போதும்.
Recommended Video

வாக்களிப்பார்கள்
மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள். நாம் போட்டோஷாப் செய்வது இல்லை. நாம் பொய்யான செய்திகளை பரப்புவது இல்லை. அதனால்தான் மக்கள் நம்மை மதிக்கிறார்கள். அவர்கள் அளவிற்கு நாம் கீழே இறங்கி செயல்பட முடியாது. நாம் நமது வாதங்களை மிகவும் கவனமாக, பொறுப்பாக, எச்சரிக்கையாக வைக்க வேண்டும். நாம் பதில் சொல்கிறோம் என்று புதிய பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டு இருக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.











Click it and Unblock the Notifications