பறந்த அட்வைஸ்! பள்ளிகளில் ஆய்வு முடித்த சில நிமிடங்களில்.. முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய ஆர்டர்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை ஆசிரியர்கள் உறுதி செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களை வரவேற்க அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருந்தன.
இதனைத்தொடர்ந்து எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். இவர்களை ஆசிரியர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

திட்டம் தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொலி, கைப்பேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிட்டார். அதேபோல் திட்டத்திற்கான ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், மாணவர்களுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மு,.க.ஸ்டாலின் ஆய்வு
இதன்பின்னர் திருவள்ளூர் மாவட்டம் அருகே வடகரையில் உள்ள ஆதிதிராடவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10ஆம் வகுப்பு மாணவர்களோடு மாணவராக வகுப்பறையில் உள்ள பெஞ்ச்சில் அமர்ந்து, ஆசிரியை நடத்திய தமிழ் பாடத்தை கவனித்தார். அவருடன் சேர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைகளை கட்டியவாறு பாடத்தை கவனித்தார். இதனைத்தொடர்ந்து அந்த பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை மற்றும் சத்துணவு சமைக்கும் சமையலறை ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை
இதனைத்தொடர்ந்து சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையையும் எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள், கழிவறைத் தொட்டிகள், குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video

எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள்
அதேபோல் கட்சி பாகுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிகளில் அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உடனடியாக மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications