மிட் நைட் “டுவிஸ்ட்”.. செந்தில் பாலாஜி கைது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை! அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் நடைபெற்ற 17 மணி அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, கரூர் இல்லத்தில் நடைபெற்ற சோதனையும் நிறைவடைந்து உள்ளது. முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்து செல்லும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா சுப்ரமணியன், ஏவ வேலு, ரகுபதி, சேகர் பாபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கே சென்றனர்.

cm-mk-stalin-conduct-emergency-meeting-about-the-arrest-of-senthil-balaji

இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளார்கள்.

முன்னதாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றபோது ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், “தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன.

இந்த நிலையில் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களது இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 'சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், எந்தச் சோதனையாக இருந்தாலும் ஒத்துழைப்பு தருவேன், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு உரிய விளக்கம் அளிக்கத் தயார்' என்று அமைச்சர் செந்தில் பாலாஜியே பேட்டியும் அளித்துள்ளார். விசாரணை நடைபெறும் இடத்தில் இருந்து முழு ஒத்துழைப்பைத் தந்து வருகிறார்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை. இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற நிலையில் உடனடியாக இதுபோன்ற காரியங்கள் நடக்கிறது என்றால் என்ன பொருள்? பொதுமேடைகளில் தி.மு.க.வையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துச் சென்றார் ஒன்றிய அமைச்சர் அவர்கள். அதற்குத் தகுந்த விளக்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் இதுபோன்ற அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது ஆகும்.

ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா?

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2016-ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் அவர்களது வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. "தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு - கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்த தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது ஒன்றிய அரசு.

இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது" என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத்தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பா.ஜ.க. உருவாக்கி வருகிறது.

பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+