முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பழனியில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநி பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். அப்போது, “அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் வேண்டும்” எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சித்த மருத்துவத்தை 'தமிழர் சித்த மருத்துவம்' என அழைப்பது உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications