தேமுதிக வேட்டியில் குழந்தை போல் சிரிக்கும் விஜயகாந்த்! கையை பற்றிய ஸ்டாலின்! நினைவு நாளில் உருக்கம்
சென்னை: தமிழக மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன் என முதல்வர் ஸ்டாலின், தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். மேலும் விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள். ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்துடன் அவர் எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு சினிமா துறையிலும், அரசியலிலும் நற்பெயர் உள்ளது. ஆண்டுதோறும் தனது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சீட் கொடுத்து படிக்க வைத்திருந்தார்.
இது மட்டுமல்லாமல் தன்னை நம்பி வந்தவர்களுக்கு விஜயகாந்த் அள்ளி அள்ளி கொடுத்தார். எல்லாவற்றையும் விட விஜயகாந்த் பாரபட்சம் இல்லாமல் உணவு கொடுத்தார் என்கிறார்கள். அவர் நடிக்கும் படத்தில் அவர் என்ன உணவை சாப்பிடுகிறாரோ, என்ன ஜூஸ் குடிக்கிறாரோ அதையேதான் அன்று லைட்மேன் உள்ளிட்ட டெக்னீசியன்களும் சாப்பிடுவர்.
அது போல் தனக்கு புக் செய்யப்பட்ட அறையில் உள்ள படுக்கையில் உதவி இயக்குநர்கள், உதவியாளர்கள் யாராவது படுத்திருந்தால் அவர்களை எழுப்பாமல் கட்டாந்தரையில் துண்டை விரித்து குழந்தை போல் தூங்குவார் என்கிறார்கள்.
கேரவனை எல்லாரும் பயன்படுத்த வேண்டும் என சொன்னவர். அவருடைய கேரவனை அவரும், அந்த படத்தில் பணியாற்றும் கடை நிலை டெக்னீஷியனும் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படிப்பட்ட எளிமைக்குச் சொந்தக்காரர்.
அவர் தமிழகத்தில் ஆட்சி அமைத்து மக்களுக்கு நன்மைகளை செய்ய முயற்சித்தார். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு அவரது தவறான கூட்டணி தேர்வால் கட்சியின் வாக்கு வங்கி சரிந்தது. அதன் பின்னர் ஒரு தேர்தலில் கூட தேமுதிக வெல்லவில்லை.
இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு தேமுதிகவுக்கு முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் அவர்கள் வென்று வாக்கு சதவீதத்தை உயர்த்தி காட்ட வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் விஜயகாந்தின் 2ஆவது ஆண்டு நினைவு தினம் குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன், கட்சி நிர்வாகி பார்த்தசாரதி, பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் அமைதி ஊர்வலமாக விஜயகாந்த் நினைவிடத்தை அடைந்தனர்.
அங்கு அவரது நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் பாஜகவை சேர்ந்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, மத்தியமைச்சர் எல்.முருகன், கரு நாகராஜன் உள்ளிட்டோர் வந்து மரியாதை செலுத்தினர்.
அது போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிடேடோர் வருகை தந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications