பாஜக இப்படி ஜெயிக்கப் பார்க்கும்.. நாம் ஒருபோதும் இரையாகிவிடக்கூடாது.. அறைகூவல் விடுத்த ஸ்டாலின்!
சென்னை : பாஜக இப்படித்தான் ஜெயிக்கப் பார்க்கும், அதற்கு நாம் ஒருபோதும் இரையாகிவிடக்கூடாது என சென்னையில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி கருணாநிதி நூற்றாண்டு விழா இலட்சினையை வெளியிட்டு கடந்த ஜூன் 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த ஜூன் 3ஆம் தேதி சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து காரணமாக அன்றைய நாள் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டதால், கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்றது. இந்தக் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "95 ஆண்டுகள் ஆண்டுகள் வாழ்ந்த கருணாநிதி இன்னும் 5 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால் இதே மேடையில் விழா நாயகராக இங்கே அமர்ந்திருப்பார். ஆனால், உடல் நலிவுற்றதன் காரணமாக நம்மை விட்டுப் பிரிந்தார். பிரிந்தார் என்பதை விட எங்கும் நம்முடன் இருக்கிறார்.
எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும், எந்த நிலைப்பாடுகளை எடுத்தாலும், தலைவர் கருணாநிதி கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்ற நினைப்போடுதான் நான் அதனைச் செய்கிறேன். இந்த மேடையிலும் கருணாநிதி அமர்ந்துகொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், பேராசிரியரும் தான் நம்மை நாள்தோறும் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் உயிரே, எங்கள் இயக்கே, எங்கள் கலங்கரை விளக்கமே உங்கள் 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். நீங்கள் எப்போதும் உடன் இருக்கும் உடன்பிறப்புகளோடுதான் இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். திமுக தோன்றிய வடசென்னை பகுதியில் நூற்றாண்டை கொண்டாடுவது சிறப்பு.
நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியர் வீட்டுப் பிள்ளை என்று சொன்னவர் கருணாநிதி. கருணாநிதியின் ஆட்சி எப்போதும் சாமானியர்களின் ஆட்சி தான். திமுக ஆட்சியே ஏழை எளிய பாட்டாளிகளின் ஆட்சி தான்.

திமுக பேரறிஞர் அண்ணா தலைமையில் முதல் முறை ஆட்சிப் பொறுப்பேற்ற போது முரசொலி இதழிலே தலைவர் கருணாநிதி, "ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசுக் கட்டில்.. இனி ஏழைகளுக்கு வாழ்வு வந்தது" என்று எழுதினார்.
பேரறிஞர் அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும் சரி - அதைத் தொடர்ந்து தலைவர் கருணாநிதி பொறுப்பேற்று நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏழைகள் - தொழிலாளர் தோழர்கள் மனமகிழ்ச்சியோடு சிரிக்கும் ஆட்சியாகத்தான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்கான தேர்தல் அது. 5 வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஜனநாயக சடங்கு அல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயக அமைப்பு முறையையும், இந்தியாவின் கூட்டாட்சியையும் காப்பாற்றுவதற்கான தேர்தல்.
இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் கைகோர்த்து ஒன்றிணைய வேண்டும். தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை, மாறுபாடுகளை மறந்து இந்தியாவை காக்க ஒன்று சேர்ந்தாக வேண்டும்.

அறிவாலயத்தில் இருந்து இந்த பொதுக்கூட்டத்துக்கு நான் காரில் வந்துகொண்டிருந்தபோது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் போனில் தொடர்பு கொண்டார். வரும் 23ஆம் தேதி பீகார் பாட்னாவிற்கு வர வேண்டும். அகில இந்திய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்றார்.
தமிழ்நாட்டில் எப்படி ஒரு வலுவான கூட்டணியை அமைத்தோமோ, அதேபோல, நாடு தழுவிய அளவில் மதவாத, பாசிச, யதேச்சதிகார பாஜக ஆட்சியை அகற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது. பிரிவினைகளால் பாஜக வெல்லப் பார்க்கும்.
சாதியால், மதத்தால் பிரிவினையால் வெல்லும் அந்தக் கட்சி, அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளைப் பயன்படுத்தி ஜெயிக்கப் பார்க்கும். அதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் யாரும் இரையாகிவிடக் கூடாது, எத்தகைய பொய்களைச் சொல்வதற்கும் பாஜகவினர் தயங்கமாட்டார்கள்" எனப் பேசினார்.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை!












Click it and Unblock the Notifications