தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ஆக குறைப்பு? அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
சென்னை: ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இன்றைய கூட்டத்தின் முடிவில் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சமாளித்து கொண்டு இருக்கிறது. எனவேதான், கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 2 வருடங்கள் அதிகரித்தார். அதாவது 60 என்று, உயர்த்தினார்.
இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும்போது செய்ய வேண்டிய பல செட்டில்மென்ட்கள் தாமதமாகும் என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசின் திட்டம்.

அரசாணை
தமிழ்நாட்டில் கடும் நிதி நெருக்கடி சூழ்ந்ததால்தான், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக கடந்த எடப்பாடி ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதற்கான அரசாணை கூட பிறப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால், இதனால் புதிய வேலை வாய்ப்புகள் அரசு துறைகளில் உருவாகவில்லை. இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் புதிய நியமனங்களுக்கும் தடை விழுந்தது.

முதல்வர் விருப்பம்
இந்த நிலையில், தற்போது, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள முதல்வர் ஸ்டாலின், 60 என்று உயர்த்தப்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்கலாமா ? என்று யோசிப்பதாக கோட்டை வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தன. அது தற்போது மேலும் விஸ்வரூபம் எடுத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அடுத்த 3 மாதத்தில் ஓய்வு?
60 வயதாக உயர்த்தப்பட்டதால் கடந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய ஊழியர்கள் 9 மாதங்களாக பணியில் தொடர்கிறார்கள். அவர்களை மேலும் 3 மாதங்கள் பணிபுரிய அனுமதித்து பின்னர், அவர்களை ஓய்வு பெற வைக்கலாம் என்று ஆலோசனை நடந்துள்ளது. அப்படி ஓய்வுபெறும் போது அவர்களுக்குரிய ஓய்வூதிய பலன்களை கொடுக்க வேண்டியிருப்பதால் அதற்கு மிகப்பெரிய அளவிலான தொகை அரசுக்கு தேவை. ஆனால், தற்போதையை நிதி நெருக்கடியில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அமைச்சரவை கூட்டம்
இருப்பினும், இப்போது, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், இந்த திட்டம் பற்றி விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நேற்று முதல் தகவல் வெளியாகிக் கொண்டு இருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நிதித்துறை அதிகாரிகள்
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை ரத்து செய்ய அல்லது மாற்றியமைக்க கடந்த ஒரு மாதகாலமாக நிதித்துறை அதிகாரிகளுடன் விவாதித்தபடி இருந்தார் ஸ்டாலின். அரசு ஊழியர்களின் வயதை மீண்டும் 58 ஆக குறைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டபோது, குறைப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், ரிட்டயர்டு ஆகும் போது அவர்களுக்கான செட்டில்மெண்ட் தொகையை கொடுத்தாக வேண்டியதிருக்கும். இப்போதைய நிதி நெருக்கடியில் இது சாத்தியமில்லையே என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பாண்ட் கொடுக்கலாம்
மேலும், இதற்கு மாற்று வழியாக, அரசு பணியில் 33 வருட சர்வீஸ் முடித்தவர்கள் 58 வயதை கடந்திருந்தால் அவர்களை ஓய்வு பெற வழி வகுக்கலாம் என்ற ஒரு யோசனையும், 60 வயதாக மாற்றியமைக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு 58 வயதான அனைவரையும் ஓய்வு பெற அனுமதிப்பது என்றும், அவர்களுக்கான செட்டில்மெண்ட்டை 2 வருடங்களுக்கு பிறகு பணமாக்கிக்கொள்ளும் வகையில் பாண்டு கொடுத்து விடலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த விசயம் குறித்தும் அமைச்சரவையில் ஸ்டாலின் விவாதிப்பார் என தெரிகிறது.

அரசு ஊழியர்கள் ஆர்வம்
எனவே அமைச்சரவையில் எடுக்கப்படலாம் என்று வெளியான தகவல் பற்றி அறிந்துகொள்ள அரசு ஊழியர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். இருப்பினும் அமைச்சரவையில் எடுத்த வேறு பல விவகாரங்கள் குறித்து தகவல் வெளியானது. இந்த விஷயத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த விவகாரம் ஒரு வகையில் புலிவால் பிடித்த கதைதான். ஏனெனில், அரசு ஊழியர்களில் சிலர் 60 வயது வரை ஓய்வு பெறும் வரை நீட்டிப்பு செய்து வருகிறார்கள். சிலர் வரவேற்கவில்லை. அதேபோலத்தான் இளைஞர்கள் மத்தியிலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைந்தால் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இதை செயல்படுத்த அரசிடம் உடனடியாக கூடுதல் நிதி தேவைப்படும்.

வரி வருவாய்
இப்போதைய சூழ்நிலையில், அதுவும் குறிப்பாக ஊரடங்கு காரணமாக போதிய வரி வருவாய் இல்லாத இந்த காலகட்டத்தில், இதை நினைத்துக் கூட பார்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறது அரசு. ஆனால் சிறப்பான பொருளாதார குழு மற்றும் திறமையான நிதியமைச்சர் உள்ளிட்டோரை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிலும் குறிப்பாக, அனைத்து தரப்பினருக்கும் அதில் இருந்து நன்மை கிடைக்க வேண்டும் என்ற முழு எண்ணத்தில் இருக்கிறார்.

என்ன முடிவு?
முதல்வர் ஸ்டாலின் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ள போதிலும், முடிவுதான் இன்னும் எட்டப்படவில்லையாம். இருப்பினும் இன்னொரு முக்கிய முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதாவது,அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜெட் வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications