துணை முதல்வர் பதவி? வந்து விழுந்த கேள்வி.. டக்கென உதயநிதி ஸ்டாலின் சூசகமாக சொன்ன பதில்!
சென்னை: எந்த பொறுப்புகள் வந்தாலும் இளைஞர் அணியை மறக்க மாட்டேன் என பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், பொறுப்புகள் மாற்றப்படுவது தொடர்பாக முதல்வர்தான் முடிவு செய்வார் என்று பதிலளித்தார்.
திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞர் அணியை மறக்க மாட்டேன்.. இளைஞரணி செயலாளர் பதவி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது, எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக தான் இருப்போம்" என்று பேசியிருந்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக பேசப்படும் நிலையில் அவர் இவ்வாறு கூறினார். அதேவேளையில் பத்திரிகைகளில் வரும் செய்திகள் கிசுகிசு வதந்தி எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இளைஞரணி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞர் அணியை மறக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறீர்கள்.. பொறுப்புகள் மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? எனக் கேட்டனர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார்" என்று கூறினார்.
தொடர்ந்து நீட் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, ''ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். சட்டப்படி போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்.. என்னைக்குமே நீட் தேர்வை எதிர்ப்போம்" என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்ற ஒரு பேச்சு எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குச் செல்ல இருக்கிறார். முதலில் இம்மாதம் 22 ஆம் தேதி அவர் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்பட்டது. பின்னர், சில காரணங்களால் அந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டத்தை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆகஸ்டு 22 ஆம் தேதி முதல்வரின் அமெரிக்கா பயணம் அமையலாம் எனக் கூறப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலவர் பொறுப்பு கொடுக்கப்படலாம் எனவும் பரவலாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications