தஞ்சாவூர் விரையும் முதலமைச்சர்! தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம் நிவாரணம்
சென்னை: தஞ்சை அப்பர் குருபூஜையில் தேர் விழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் நிதி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சை அருகே களிமேட்டில் 94ஆவது அப்பர் குருபூஜையையொட்டி தேரோட்டம் நேற்று தொடங்கியது. அப்போது தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு திருப்பத்தின் போது தேரை திருப்பிய போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட 11 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனை
காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் நிதி அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், தஞ்சை களிமேட்டில் நடந்த தேர் திருவிழாவின் போது 11 பேர் பலியான சம்பவத்தை அறிந்து துயரமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் வழங்கப்படும்.

உயர் சிகிச்சை
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் மீட்பு பணிகளை விரைவுப்படுத்தவும் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன் என முதல்வர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று தஞ்சை செல்கிறார் ஸ்டாலின்
பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து தஞ்சைக்கு விமானம் மூலம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் களிமேடு செல்லும் முதல்வர் ஸ்டாலின், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அது போல் காயமடைந்தவர்களையும் அவர் நேரில் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications